அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள்.. அடையாறு ஹோட்டலில் 3 பேர்.. ஏன் தெரியுமா?
சென்னை : சென்னை அடையாறில் நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், காந்தி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
நாளை குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் சற்று முன்பு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார்.
அதிமுகவின் 63 எம்.எல்.ஏக்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திரௌபதி முர்முவின் தேர்தல் முகவர்களான பாஜக எம்.எல்.ஏக்களும் இக்கூட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் தேர்தல் நாளை (ஜூலை 18) நடைபெற உள்ளது. இதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரௌவுபதி முர்முவுக்கு அதிமுக ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை அடையாறில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

பாஜக எம்.எல்.ஏக்கள்
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 63 அதிமுக எம்எல்ஏக்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் கூட்டணி கட்சியான பா.ஜ.கவுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் அவர்களில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், காந்தி ஆகிய மூன்று எம்எல்ஏக்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

வானதி சீனிவாசன்
திரௌபதி முர்முவின் தேர்தல் முகவர்கள் என்ற முறையில் இந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்குகிறார்கள் பா.ஜ.கவின் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் சட்டமன்ற பாஜக கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன். நாகர்கோவில் எம்.எல்.ஏ காந்தியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

தொடர்ந்து ஆலோசனை
பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை வழங்கியபிறகு அங்கிருந்து சென்று விடுவார்கள் என்றும், தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி குறித்தும் பேசப்படலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications