மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் குஷ்பு..? பாஜக தலைமை கொடுக்கும் இரண்டு ஆப்ஷன்கள்..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்புவை களமிறக்க திட்டமிட்டுள்ளார் எல்.முருகன்.
அதிமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதியை பெற்றுவிட வேண்டும் என்பதில் தமிழக பாஜக நிர்வாகிகள் மிக கவனமாக இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பாஜகவுக்கு சற்று சாதகமான தொகுதி என்பதால் மயிலாப்பூரில் வெற்றி எளிதாக இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.

நடிகை குஷ்பு
பாஜகவின் புது வரவான நடிகை குஷ்புவுக்கு கட்சி மேலிடம் விரைவில் பெரிய பரிசு ஒன்றை தரவிருக்கிறது. திமுக மற்றும் காங்கிரஸில் கிடைக்காத அங்கீகாரம் பாஜகவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு குஷ்புவிடமும் உள்ளது. அந்த வகையில் எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ குஷ்பு ஆனாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை. குஷ்புவின் சாய்ஸ் எம்.பி. என்றாலும் அதற்கு முன்னதாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் குஷ்புவை வேட்பாளராக களமிறக்கும் திட்டத்தில் இருக்கிறது தமிழக தலைமை.

பாஜக உறுதி
முன்னெப்போதும் இல்லாத நிலையில் தமிழக அரசியல் நிலவரத்தை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது பாஜக தேசியத் தலைமை. தென்னிந்தியாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் இந்த முறை கணிசமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்களை பெற வேண்டும் என்ற ஒற்றை அஜெண்டாவோடு செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கட்சியில் உள்ள பிரபலமான நபர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்யும் பணி தொடங்கியிருக்கிறது.

குஷ்பு சாய்ஸ்
குஷ்பு பாஜகவில் இணைவதற்கு முன்பே அவருக்கு ராஜ்யசபா எம்.பி தரப்படும் என்ற உறுதி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே தமிழக சட்டமன்றத்திற்குள் பாஜக உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் என்பதில் மிக சீரியஸாக பணியாற்றி வரும் எல்.முருகன், குஷ்புவை மயிலாப்பூரில் போட்டியிடவைத்தால் சாதகமான முடிவு வரும் என நம்புகிறார். மயிலாப்பூர் அதிமுகவின் கோட்டையாக திகழ்வதால் கூட்டணியில் இந்த தொகுதியை பாஜகவுக்கு விட்டுக்கொடுக்குமா எனத் தெரியவில்லை.

சொந்த மாநிலம்
குஷ்பு ஒரு வேளை ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டால் அவரது சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக பேச குஷ்புவை நாம் தொடர்புகொண்ட போது அழைப்பை ஏற்காததால் அவரது நெருங்கிய தோழி ஒருவரிடம் பேசினோம். அவர் கூறியதாவது,''தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் போது தான் கேரளாவிலும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால் குஷ்பு பிரச்சாரத்தில் பிஸியாக இருப்பார். அப்படியிருக்கும் போது அவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அங்கு மட்டுமே கவனம் செலுத்த முடியும். அதனால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை'' எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications