சென்னையில் சசிகலாவுடன், பாஜகவின் விஜயசாந்தி திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?.. பரபர தகவல்!
சென்னை: சென்னையில் சசிகலாவை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு வந்து அதிரடி காட்டினார். ஆனால் சென்னை வந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து அமைதி கொண்டார்.

சசிகலாவின் அதிரடி
ஆனால் சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் தனது அமைதியை கலைத்த சசிகலா அதிமுகவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அதன்பிறகு தான் வெளியிடும் அறிக்கைகள், செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறத் தொடங்கினார்.

சசிகலாவுடன், விஜயசாந்தி சந்திப்பு
தற்போது அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற முழு மூச்சில் இறங்கியுள்ள சசிகலா அவ்வப்போது அதிரடி அறிக்கைகள் வெளியிடுவது, பேட்டிகள் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி, சசிகலாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

மாணவி வீட்டுக்கு விசாரணைக்கு வந்தார்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் மாணவி வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை குழுவில் விஜயசாந்தியும் உள்ளார்.

திடீர் சந்திப்பு ஏன்?
இதற்காக தமிழகம் வந்த நிலையில்தான் விஜயசாந்தி, சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இந்த நிலையில் விஜயசாந்தி-சசிகலா சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விஜயசாந்தி சொல்வது என்ன?
சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என கூறி வரும் நிலையில் எதிர்கால கூட்டணி தொடர்பாக அவரிடம் விஜயசாந்தி பேசியதாகவும், அதிமுக மீதான பாஜகவின் எதிர்ப்பை காட்டுவதற்காகத்தான் இந்த சந்திப்பு நடந்ததாகவும் பல்வேறு வியூகங்கள் றெக்கை கட்டி பறக்கின்றன. ஆனால் சசிகலாவிடம் அரசியல் ரீதியாக ஏதும் பேசவில்லை என்றும் நட்புரீதியாக சந்தித்து பேசியதாகவும் விஜயசாந்தி விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications