#Exclusive தாழ்த்தப்பட்ட மக்கள் கனகசபை மீது ஏறக்கூடாது என பாஜக சதி செய்கிறது.. தமிழன் பிரசன்னா பரபர!
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சனையை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. கோவிலுக்கு வரும் இந்துக்களை கனசபை மீது ஏறக்கூடாது என இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லும் பாஜக சொல்கிறது என விமர்சித்துள்ளார் திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் போலீசாருடன் நேற்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். இரு தரப்பிலும் மாறி மாறி குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா பாஜக சதி செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழன் பிரசன்னா பேட்டி: திமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், "ஒரு சாரார் மட்டுமே சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தம் கொண்டாடிக்கொண்டு, மற்றவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக, தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கும் செயலைத்தான் அந்தக் கோவிலின் தீட்சிதர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
திராவிட மாடல் அரசு என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற சமமான அரசியலை எல்லாத் தளங்களிலும் கொண்டு சேர்க்கும் ஒரு அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் கடந்த 10 ஆண்டு காலமாக தீட்சிதர்கள் பிடியில் இருந்த அந்தக் கோவில், இன்றைக்கு திமுக அரசின் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பேரில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சிகளை அமைச்சர் சேகர்பாபு மேற்கொண்டு வருகிறார்.
உரிமை இல்லை: கனகசபை மீது ஏறக்கூடாது என்று சொல்வதற்கு தீட்சிதர்களுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. அந்தக் கோவிலில் இருக்கும் எல்லாமே அரசின் சொத்து. அங்கு அதிகாரம் செலுத்துவதற்கு தீட்சிதர்களுக்கு உரிமை கிடையாது. எது சட்டப்பூர்வமாக சரியோ அதைச் செய்யக்கூடிய அரசாக திமுக அரசு உள்ளது.
நேற்று அறநிலையத் துறை பெண் அதிகாரி கனகசபை மீது ஏறும்போது தீட்சிதர்கள் தாக்க முற்பட்டு, இழிவான சொற்களைப் பயன்படுத்தி அவரை திட்டினர். அவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும்.
பாஜக அரசியல்: இந்தப் பிரச்சனையை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. பாஜகவைச் சேர்ந்தவர்கள் கனகசபையில் ஏறக்கூடாது என்று சொல்கிறார்கள். கோவிலுக்கு வரும் இந்துக்களை கனசபை மீது ஏறக்கூடாது என இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லும் பாஜக சொல்கிறது. அப்படியென்றால் உயர் சாதி இந்துக்களுக்கான கட்சியாக செயல்பட்டு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துக்கள் கனகசபை மீது ஏறக்கூடாது என பாஜக தடுக்கிறது.
பாஜக, மதவாதத்தையும் சாதிய வாதத்தையும் கையில் எடுத்து எதன் மூலம் பிரச்சனையைக் கொண்டு வரலாம் என்ற அடிப்படையில் இதை நடத்துகிறது. இதையும் அரசு தைரியத்தோடு எதிர்கொள்ளும். மீண்டும் முழுமையாக சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் பிடியில் இருந்து சட்டப்பூர்வமாக மீட்கும் பணியை திமுக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்து முடிப்பார்.
அயோக்கியத்தனம்: தீட்சிதர்களோ, சிதம்பரம் கோவிலோ சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் அவர்களின் பணியைச் செய்யப்போனால், தீட்சிதர்கள் பூணூலை பிடித்துக்கொண்டு தடுத்து நிறுத்தி சிதம்பரம் நடராஜர் கோவிலை சொந்தம் கொண்டாடுவது மிகப்பெரிய அயோக்கியத்தனம்.
தடை போடுவதற்கு தீட்சிதர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடமாக கோவில் இருப்பதை தடுக்கும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது. அப்படியும் அதிகாரிகளை தாக்க முற்படும்போது சட்டம் தன் கடமையைச் செய்யும். காவல்துறை அதைத்தான் செய்திருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications