6 ஆண்டுகளில் இல்லாத மழை.. நிவாரண பணிகளில் உடனடியாக ஈடுபடுக.. பாஜகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்
சென்னை: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் பாஜகவினர் முனைப்பு காட்ட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை உள்பட தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரே நாளில் 20 செ.மீ. மழை பெய்துள்ளதால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் உணவு சமைக்க வழியில்லாமல் பசியும் பட்டினியுமாக வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வீட்டில் வாங்கி வைத்திருந்த மளிகை பொருட்கள் எல்லாம் நீரில் அடித்து செல்லப்பட்டு விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்களும் அரசியல் கட்சியினரும் உணவு பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
இது போல் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு களத்தில் இறங்கி உதவ வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகமெங்கும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மழையால் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துள்ளன.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிக அதிகமான அளவில், கடந்த 6 ஆண்டுகளாக இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் மக்கள் துயர் துடைக்கும் வகையிலே, நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டுகிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லுதல், உதவிப் பொருட்கள் வழங்குதல் போன்ற பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன்.
மிகப்பெரிய பிரச்சனைகள் இருப்பின், தொடர்புடைய அரசு அதிகாரிகளை அணுகி தேவையான உதவிகளை பெற்றுத்தர வேண்டுகிறேன். பொது மக்களும், ஆங்காங்கே மழை வெள்ளத்துடன், தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிகம் தேங்கி வருவதால் மிகக் கவனமாக வெளியில் சென்று பாதுகாப்புடன் வர வேண்டும். முடிந்த அளவு, வெளியில் செல்வதை தவிர்த்திட அன்புடன் வேண்டுகிறேன்.
சென்னை தி நகர் துரைசாமி சுரங்கபாதை உள்பட 3 சுரங்கபாதைகள் மூடல்!
எவ்வித புரளிக்கும் இடம் தராமல், மக்களை அச்சத்தில் இருக்க விடாமல், அதிகார பூர்வமான தகவல்களை மட்டுமே நம்பவும். கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.