நான் அமைச்சர் ஆகாமல்.. நோ ஆதரவு.. விஜய்க்கு நோ சொன்ன திருமா.. சட்டென போனை போட்ட ராகுல்
சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எண்ணிக்கையைப் பெறுவதில் நிறைய நெருக்கடிகளை தவெக தலைவர் விஜய் சந்தித்து வருகிறார். ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை தவெகவுக்கு மக்கள் தராததால், பெரும்பான்மைக்கான இடங்களுக்கு மாற்றுக் கட்சிகளின் ஆதரவை கேட்டுப் பெற வேண்டிய சூழல்களுக்கு தள்ளப்பட்டுள்ளார் விஜய்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசின் ஆதரவை பெற, ராகுல்காந்தியிடம் பேசியிருக்கிறார் விஜய். ஆதரவு தருவதில் பிரச்சனை இல்லை என்ற அவர், முடிவுகள் முழுமையாக வந்ததும் பேசுவோம் என சொல்லியுள்ளார் ராகுல். இதனையடுத்து, கட்சியின் முக்கியஸ்தர்களிடம் ராகுல் விவாதித்தபோது, தவெகவின் கூட்டணி ஆட்சியில் பங்கெடுக்க வேண்டாம்; வெளியில் இருந்து ஆதரவு தருவோம். இந்த முடிவை எடுப்பது பல்வேறு விசயங்களுக்கு நன்மைப் பயக்கும் என கிரிஸ் சோடங்கர் ஒரு யோசனை சொல்ல, இது நம்பகத்தன்மையை உருவாக்காது.

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவில் நாம் இருக்கும் போது, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமானால் இப்போதே விஜய்யின் அமைச்சரவையில் நாம் பங்கெடுப்பதுதான் திமுகவுக்கு வைக்கப்படும் செக்காக இருக்கும் என ராகுலின் நண்பரான ப்ரவீன் சக்ரவர்த்தி சொல்லியிருக்கிறார். இதே ரீதியில் அந்த ஆலோசனை நீடித்திருக்கிறது.
அதேசமயம், விஜய் தரப்பிலிருந்து வைக்கப்படும் யோசனைகளின் அடிப்படையில் உள்ளேயிருந்து ஆதரவா? வெளியில் இருந்து ஆதரவா? என்பதை தீர்மானிக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். விசிக தலைவர் திருமா நம்மை ஆதரிப்பார் என ஆதவ் அர்ஜுனா சொல்லியிருந்தார். அதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது. ஆனால், ஆதரவு இல்லை என சொல்லிவிட்டாராம் திருமா. அவரை பொறுத்தவரை, காங்கிரஸ்-விசிக ஆதரவு கொடுத்தாலும் பெரும்பான்மை பலம் கிடைக்காது. அதனால் பாமகவின் ஆதரவை கேட்பார்கள். பாமகவும் ஆதரவு கொடுக்கும்.
பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது என்பதால், ஆதரவு இல்லை என சொல்லியிருக்கிறாராம். ஆனால், விசிக தரப்போ, திருமாவளவன் எம்.எல்.ஏ.யாக இருந்துள்ளார், எம்.பி.யாகவும் இருந்து வருகிறார். எந்த ஒரு ஆட்சியிலும் அவர் அமைச்சராகும் யோகம் அவருக்கு கிடைக்கவில்லை. தற்போது விஜய்க்கு ஆதரவு கொடுத்தால் விசிகவில் ஒருவருக்கு அமைச்சராகும் யோகம் அடிக்கும். தன்னை தவிர யாரும் தனித்து அமைச்சராவதில் திருமாவுக்கு விருப்பமில்லை. அதனால்தான் விஜய்க்கு ஆதரவு தர மறுத்துள்ளார் என்கிறார்கள்.
திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகளிடம் 4 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் விஜய் தரப்பு அணுகியுள்ளது. அவர்கள், வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம். எங்கள் கொள்கைப்படி மாற்று கட்சி ஆட்சியில் கேபினெட்டில் இணையும் பழக்கம் கிடையாது என சொல்லிவிட்டார்களாம். தேமுதிக பிரேமலதாவிடம் பேசலாமா? என்றபோது அவரை கூட்டணிக்குள் கொண்டு வருவதை விஜய் உள்பட யாருமே விரும்பவில்லையாம். அதனால் அந்த யோசனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் அன்புமணியிடம் உள்ள நெருக்கத்தில் அவரிடம் பேசியிருக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி. ஆதரவு தர ஒப்புக்கொண்டிருக்கிறார் அன்புமணி. ஆனால், அவர் வைத்துள்ள சில டிமாண்டுகள் விஜய் தரப்பை யோசிக்க வைத்திருக்கிறது. அதனால் இப்போது வரை மாற்று கட்சிகளிடமிருந்து ஆதரவு பெறுவதில் சிக்கல்கள் இருக்கிறது. அது இன்றைக்குள் சரிசெய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு விடும் என்கிறார்கள் தவெகவினர் .
இதற்கிடையே, சின்ன சின்ன கட்சிகளின் ஆதரவை கேட்பதற்கு பதிலாக, அதிமுகவிடம் ஆதரவைக் கேட்டுப் பெற்றால் என்ன? என்கிற கருத்து தவெகவில் உருவாகியிருக்கிறது. அதிமுகவிடம் ஆதரவு கேட்பது, சந்தர்ப்பவாதம் என நமக்கு எதிரான எதிர்மறை விமர்சனங்கள் உருவாகும், நமக்கு வாக்களித்த மக்களிடம் கூட மோசமான விமர்சனங்கள் வெளிப்படலாம் . அதனால் யோசித்து முடிவெடுக்கலாம் என பெரும்பாலானோர் சொல்லியுள்ளனர்.
இறுதியில், அதிமுகவின் ஆதரவை கேட்க விஜய் முடிவெடுத்தால், எடப்பாடி பழனிச்சாமியும் வெளியில் இருந்து வேண்டுமானால் ஆதரவு தருகிறோம். கூட்டணி ஆட்சிக்குள் வர இயலாது என்று சொல்வதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஜான், ஆதவ் தரப்பிலிருந்து விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டது என்கிறார்கள்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications