பெட்ரோல் விலை குறைக்கணுமா? அதை பற்றி நீங்கள் வருத்தப்படலாமா? பிடிஆருக்கு அண்ணாமலை கேள்வி!
சென்னை: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வியெழுப்பி இருந்த நிலையில் "தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்?" என பாஜக தலைவர் அண்ணாமலை எதிர் கேள்வியெழுப்பியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த காலங்களில் பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய நிலையில், ரஷ்யா உக்ரைன் போரை மத்திய அரசு கைகாட்டியது.
இந்த போரினால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது என்னவோ உண்மைதான். ஆனால், அதெல்லாம் ஜூன் மாதம் வரைதான். அதன் பின்னர் விலை சரிய தொடங்கியது.
Exclusive ஸ்டாலினுக்கு கேரள அரசை கேட்க தைரியம் இருக்கா? திருட்டுத்தனம்! சவால் விட்ட அர்ஜூன் சம்பத்!
அமைச்சர் பிடிஆர்
கடந்த மார்ச் மாதத்தில்தான் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யில் மிக அதிக விலையில் விற்பனையானது. அதாவது ஒரு பீப்பாய் சுமார் 123 அமெரிக்க டாலர் என்கிற அளவில் விற்பனை செய்யப்பட்டது. அப்போது இந்தியாவில் பெட்ரோல் சராசரியாக ரூ.95க்கு விற்கப்பட்டது. பின்னர் குறைந்து ஜூன் மாதம் சற்று விலை அதிகரித்து பின்னர் ஒரேயடியாக விலை சரியத் தொடங்கியது. ஆனால் இதற்கு நேர்மாறாக நாடு முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 72 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் ரூ.102க்கு விற்பனையாகிறது. ஏறத்தாழ 8 மாதங்களாக விலை தொடர்ந்து சரிந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றன.
அண்ணாமலை
திமுக சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று இது குறித்து டிவிட்டரில் கேள்வியெழுப்பி இருந்தார். அதாவது, "சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. இந்த விலைக்குறைப்பை செய்யவிடாமல் சில சக்திகள் பாதுகாப்பதை போல தெரிகிறது" என கடந்த ஓராண்டுக்கான கச்சா எண்ணெய் எவ்வளவு விலைக்கு விற்பனையாகிறது என்கிற புள்ளிவிவரங்களை இணைத்து ட்வீட் செய்திருந்தார். இது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளிக்கும் விதமாக ட்வீட் செய்திருக்கிறார். அதில், "தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
விலை குறைப்பு
மேலும், "பெட்ரோல் லிட்டருக்கு ₹2 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹4 குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும் . ஆனால், விலையை குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது" என்று கூறியுள்ளார். திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததையடுத்து கடந்த ஆகஸ்டில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெட்ரோல் மீது விதிக்கப்பட்டுள்ள வரியில் ரூ.3 குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டது. அதேபோல மத்திய அரசு தரப்பில் மே மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.9 மற்றும் டீசல் மீது ரூ.7.50 வரி குறைக்கப்படும் என்று அறிவித்தது. இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை ஓரளவு குறைந்தது.
காரணம்
ஆக இப்படியாக மத்திய மாநில அரசுகள் இரு தரப்பிலும் வரி குறைக்கப்பட்டாலும் சாமானிய மக்கள் இந்த வரி குறைப்பால் பெரிய அளவு பலன் உருவாகவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டை பொருத்த அளவில், ஒரு லிட்டர் பெட்ரோலின் உண்மையான விலை ரூ.57.35தான். ஆனால், மத்திய அரசு இதற்கு ரூ.19.90 கலால் வரி விதித்திருக்கிறது. சராசரி டீலர் கமிஷன் ரூ.14.68. தமிழ்நாட்டை பொருத்த அளவில் ரூ.11.95 வாட் வரியாக விதிக்கப்படுகிறது. ஆக இதெல்லாம் சேர்த்துதான் மொத்தமாக பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.