நாங்க வந்து.. பாஜக வந்து.. நிறைய வந்து.. தமிழுக்கு பாஜக என்ன செய்தது கேள்விக்கு கராத்தே ஆஹா பதில்!
சென்னை: தமிழ் வளர்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சி என்ன செய்தது என்ற செய்தியாளர் ஒருவரது கேள்விக்கு பாஜகவின் கராத்தே தியாகராஜன் பதிலளிக்க முடியாமல் திணறிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தமிழ் பாதுகாப்பு விவகாரத்தை திடீரென பாஜக கையில் எடுத்தது. இந்தி திணிப்புக்கு எதிராக ஆளும் திமுக தொடர்ந்து போராடி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வு குழுவின் இந்தி திணிப்பு பரிந்துரைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இருமொழி கொள்கை
திராவிடர் இயக்கத்தைப் பொறுத்தவரையில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையைத்தான் கடைபிடித்து வருகிறது. ஆட்சியிலும் இரு மொழிக் கொள்கையையே திராவிட கட்சிகள் பின்பற்றி வருகின்றன. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை முயற்சிக்கு திமுக, அதிமுக அரசுகள் கடும் எதிர்ப்பையும் தெரிவித்தன.

திராவிடர் குரலில் பாஜக
இந்த பின்னணியில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, ஆங்கிலத்துக்குதான் முக்கியத்துவம் தருகிறது; தமிழுக்கு முக்கியத்துவம் தராமல் புறக்கணித்துவிட்டது என பாஜக ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தது. தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும், தமிழை வழிபாட்டு மொழியாக்க வேண்டும் என்ற திராவிடத்தின் குரலில் பாஜகவும் பேசி வருகிறது. இதற்காக பாஜகவினர் போராட்டங்களையும் நடத்தினர். ஆனால் பாஜகவினர் நடத்திய போராட்டங்களிலேயே தமிழ் தவறாக எழுதப்பட்டிருந்தது விமர்சிக்கப்பட்டிருந்தது.

கராத்தே பதில்
தமிழ் பேசியே வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம்; தமிழாலேயே ஆட்சிக்கு வந்தன திராவிட கட்சிகள் என்ற சரித்திரத்துக்கு முரணாக பாஜக பேசியும் செயல்பட்டு வருவது விமர்சிக்கப்பட்டும் வந்தது. இந்த நிலையில் பாஜகவின் கராத்தே தியாகராஜனிடம், தமிழுக்கு பாஜக என்ன செய்தது என செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பதிலே சொல்ல முடியாமல் கராத்தே தியாகராஜன் திணறும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கராத்தே தியாகராஜன் சொன்னது என்ன?
அந்த வீடியோவில் கராத்தே தியாகராஜன் கூறியிருப்பதாவது: பாஜக வந்து, நாங்க வந்து, தமிழகத்துல வந்து, அதே 2 மொழியை புறக்கணிக்கவில்லை, அமித்ஷா வந்து தெளிவாகவே சொல்லிட்டாரு, சிதம்பரம் ஹோம் மினிஸ்டரா இருக்கும் போது அவரு கொடுத்த பைண்டிங்ஸ் கொடுத்தாரு, தாய்மொழிக்கு முக்கியத்துவம் குஜராத்தில், மத்திய பிரதேசத்தில் தாய்மொழிக்கு முக்கியத்துவம், அதை வந்து தமிழில் முக்கியத்துவம், கலைஞரே செம்மொழின்னு மாநாடு நடத்துறார்.. இவ்வாறு கராத்தே தியாகராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications