தாமரைக்கு வந்தாச்சு.. அடுத்து யாரை எதிர்த்து நிறுத்தப்படுவார் குஷ்பு.. ஸ்டாலினா, உதயநிதியா?
சென்னை: பாஜகவில் ஐக்கியமாகி இருக்கும் நடிகை குஷ்பு சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அல்லது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து களம் காண்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2010-ம் ஆண்டு திமுகவில் குஷ்பு இணைந்த போது அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக திமுகவின் தற்போதைய தலைமையின் குடும்பம்தான் குஷ்புவுக்கு எதிர்ப்பு காட்டியது.
வெட்கமாயில்ல பாஜகவுக்கு.. அப்படின்னு திட்டிட்டு அங்கயே போயிட்டாரே குஷ்பு.. எப்படி தாக்கு பிடிப்பார்!
ஸ்டாலின் தலைமைக்கு எதிர்ப்பு
குஷ்புவும் தாம் கருணாநிதி தலைமையை மட்டும் ஏற்பவராகவே திமுகவில் காட்டிக் கொண்டார். இதனால்தான் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்டாலின் தலைவர் பதவிக்கு வருவதற்கு எதிராக கருத்து தெரிவித்து பெரும் சர்ச்சையானது. இதன்விளைவாக குஷ்புவை திமுக தொண்டர்கள் தாக்கினர்.
பாஜகவில் ஐக்கியம்
இதன்பின்னரும் திமுகவில் குஷ்பு நீடிக்கக் கூடாது என்பதில் பலரும் உறுதியாக இருந்தனர். வேறுவழியே இல்லாமல் குஷ்புவும் திமுகவை விட்டு வெளியேறி 2014-ல் காங்கிரஸில் இணைந்தார். இந்த 6 ஆண்டுகாலமும் காங்கிரஸில் தாக்குப் பிடித்த போதும் இனியும் அங்கே இருக்க முடியாது என்பதால் இப்போது பாஜகவில் இணைந்துவிட்டார்.
தமிழக தேர்தல் களத்தில் குஷ்பு
டெல்லியில் பாஜக பொதுச்செயலாளர் சிடி ரவி முன்னிலையில் இணைந்த குஷ்புவுக்கு தமிழக பாஜகவில் என்ன பதவி வழங்கப்படும்? அல்லது தேசிய அளவில் ஏதேனும் பதவி வழங்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் குஷ்புவை முன்னிறுத்தி பாஜக பிரசாரத்தை தீவிரம்காட்டவும் செய்யும். திமுக, காங்கிரஸ் கட்சிகளில் மறுக்கப்பட்ட தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் பாஜக வழங்கக் கூடும்.
ஸ்டாலினா? உதயநிதியா?
அப்படி குஷ்பு, சட்டசபை தேர்தலில் களமிறக்கப்பட்டால் யாரை எதிர்த்து எந்த தொகுதியில் நிறுத்தப்படுவார்? என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்று. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அல்லது அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து குஷ்பு களமிறக்கப்பட்டால் நோட்டாவை தாண்டாத கட்சி பாஜக என்ற பிம்பத்தை குஷ்புவால் தகர்க்க முடியும் என்பதும் பாஜகவினர் நம்பிக்கை. தனக்கு தேர்தல் வாய்ப்புகளை நிராகரித்த திமுக தலைமையின் குடும்பத்தை இப்படி களமிறங்குவதன் மூலம் வன்மம் தீர்க்கும் சந்தர்ப்பமாகவும் குஷ்புவும் கருதக் கூடும்.