அங்குலம் அங்குலமாக திமுகவை விளாசும் பாஜக.. யாருடைய பாக்கெட்டை நிரப்ப இப்படி செய்றாங்க? யார் பாருங்க
சென்னை: தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்துவைத்தும்கூட, கள்ளச்சாராயம் இந்த நிலைக்கு வந்திருக்கிறதென்றால், மாநில அரசு யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள், அப்பாவிகளின் உயிரை பழிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள்? என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறார் பாஜகவின் வானதி சீனிவாசன்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 130க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில், இதுவரை பலி எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது.. மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

எதிர்ப்புகள்: கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.. அதேபோல எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இதில் பாஜக உச்சக்கட்டமாக கொதித்துள்ளது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்திற்கு நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன்: அதேபோல, கள்ளச்சாராயம் உயிரிழப்புக்கு அரசு நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என்று பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.
"இது முதல்முறையல்ல. குறைந்த காலகட்டத்தில் இதுபோன்று 2வது சம்பவம் தமிழகத்தில் நடக்கிறது. பாஜக இது குறித்து தனது கவலையை எழுப்பியிருக்கிறது. டாஸ்மாக் கடைகளை அரசு ஏற்று நடத்தினாலும் இப்படியான சோகங்கள் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது" என்று அறிக்கை வாயிலாக வானதி சீனிவாசன் கூறியிருந்தார்.
டாஸ்மாக்: நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோதுகூட, ஆட்சிக்கு வரும்போது படிப்படியாக டாஸ்மாக்கை குறைப்போம் என்று திமுகவில் சொன்னார்கள்.. "அரசு மதுவிற்பனையை மட்டுமே நம்பியிருக்கவில்லை. ஆனால் டாஸ்மாக் மூடப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்" என்பதே இதுவரை அரசின் பதிலாக இருந்து வந்தது.
ஆனால், இன்று இத்தனை பேர் பாதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதென்றால், இன்னும் எந்தெந்த மாவட்டங்களில் இவையெல்லாம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.
விதவைகள்: திராவிட மாடல் ஆட்சி என்பது தமிழகத்தை போதையில் தள்ளும் மாடலாக இருக்கிறது. ஒருபுறம் கஞ்சா, போதை பொருள்களின் விற்பனையால் சின்னஞ்சிறு சிறுவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் இருக்கிறது. இன்னொருபக்கம் டாஸ்மாக் வாயிலாக தமிழகத்தில் அதிகமாக விதவைகளை உருவாக்கும் மாடலாக இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது.
இந்த சம்பவம் அரசே கொலை செய்வதற்கு ஒப்பானது" என்று சீறியிருந்தார் வானதி. இன்றைய தினமும் மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக அரசை கடுமையாக சாடியிருக்கிறார்..
அனுமதியில்லை: "மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பார்க்கில், யோகா பயிற்சியை இப்பகுதி மக்களுடன் சேர்ந்து செய்வதற்காக பாஜக சார்பில் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், யோகா பயிற்சிக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
இன்னைக்கு காலையில், வழக்கமாக நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக்கிங் போகிறவர்களையும் வரவிடாமல் பார்க்கை இழுத்து மூடி விட்டார்கள். மிகவும் சிறுபிள்ளைத்தனமான அரசாங்கத்தின் நடவடிக்கையாகவே இதை பார்க்கிறோம். சர்வதேச யோகா தினத்தில் மக்களோடு சேர்ந்து யோகா செய்வதில், என்னவாகி விடப்போகிறது?
சாராய சாவு: தமிழக அரசு எதற்கெல்லாம் கவனம் கொடுக்க வேண்டுமோ அதற்கெல்லாம் கவனம் கொடுக்கவில்லை.. கள்ளக்குறிச்சி சம்பவம் அத்தனை பேரின் மனதையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய சாவை தடுக்க முடியவில்லை.. கள்ளச்சாராயம் விற்கும் கட்சியினரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் யோகா செய்யும் கட்சி நிர்வாகிகளை, சாதாரணமாக வரும் பொதுமக்களையும், நடைபயிற்சி செய்யும் பார்க்கையும் பூட்டி வைத்து தடை செய்யக்கூடியதுதான் இந்த அரசாங்கம் நிலைமை.
உடல் உழைப்பை சார்ந்து உள்ள சமுதாயத்தில் உடல் வலியை மறக்க, மறைப்பதற்காக என்று நினைத்துக்கொண்டு இந்த மது பழக்கத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.
மாநில முதல்வர்: இன்று தமிழகத்தில் சிறுவர்கள் கைகளில் கஞ்சா, நடுத்தர வயதுடையவர்களிடம் டாஸ்மாக், வறுமை இருக்கக்கூடிய மக்கள் இருக்கும் பகுதிகளில் ஆளும்கட்சிக்காரர்களின் துணையுடன் விலை குறைவாக இருக்கும் கள்ளச்சாராயம் ஆறாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படி நடப்பது 2வது சம்பவமாக உள்ளதென்றால், மாநிலத்தின் முதல்வருக்கு தம்முடைய துறையின் மீது கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம்.
விசாரணை கமிஷன் அமைத்தாலும், அதிகாரிகளை மாற்றினால் இழந்த உயிர்கள் இழந்ததுதான். ஒவ்வொரு தெருவுக்கும் மதுக்கடைகளை திறந்துவைத்தும் கூட இன்று கள்ளச்சாராயம் இந்த நிலைக்கு வந்திருக்கிறதென்றால் மாநில அரசு யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள், அப்பாவிகளின் உயிரை பழிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள்? என்று பதில் சொல்ல வேண்டும்" என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன்.












Click it and Unblock the Notifications