எல் முருகன் வழியில் அண்ணாமலை.. திடீரென நடந்த மாற்றங்கள்.. கவனித்தீர்களா!
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்ரோஷ அரசியல் கைவிட்டு, அண்மைக் காலமாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் பாணியிலான அரசியலை கையாண்டு வருகிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளில் ஆக்ரோஷம் குறைந்து காணப்படுவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை திருப்பியுள்ளது. தமிழக பாஜக தலைவராக செயல்பட்ட எல் முருகனக்கு மத்திய இணையமைச்சர் பதவி ஒதுக்கப்பட்ட பின், கட்சியில் ஏகப்பட்ட சீனியர்கள் இருக்க அண்ணாமலைக்கு தமிழக பாஜக தலைவர் பதவி அறிவிக்கப்பட்டது.
மாநில பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நாள் முதலே, திமுகவுக்கு எதிராக அரசியலிலும், தமிழக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என பரபரப்பாக இயங்கி வந்தார். இன்னும் சொல்லப் போனால், அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக வளர்ச்சியடைவதாக பார்க்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏவை சைக்கிள் கேப்பில் தூக்கிய பாஜக.. அண்ணாமலை ஸ்கெட்ச்.. அதிமுகவுக்கு பயங்கர ஷாக்!
பிடிஆர்- அண்ணாமலை மோதல்
தமிழ்நாட்டின் பல்வேறு மாநில நிர்வாகிகளை சந்திப்பது, மோடி அரசின் சாதனைப் பொதுக்கூட்டங்களில் திமுக அரசை விமர்சிப்பது என தீவிரமாகவே அண்ணாமலை செயல்பட்டு வந்தார். ஆனால் மதுரை விமான நிலையத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பேசுபொருளானது. அதேபோல் நிதியமைச்சரவை செருப்புடன் ஒப்பிட்டு பேசியது பலரையும் முகம் சுழிக்க வைத்தது.
எல் முருகனுக்கு தனி அறை
அண்ணாமலையின் செயல்பாடுகள் பாஜக சீனியர்களையே பரபரப்பாக்க, மத்திய இணையமைச்சர் எல் முருகனுக்கு கமலாலயத்திலேயே அறை ஒதுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசியல் மீண்டும் எல் முருகன் கவனம் செலுத்த தொடங்கினார். இதனால் அண்ணாமலையின் மாநில தலைவர் பதவிக்கான அதிகாரம் குறைந்ததாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்பட்டது.
மீண்டும் சர்ச்சை
எல் முருகன் தமிழக அரசியல் பக்கம் திரும்ப, அண்ணாமலை சிறிது காலம் அமைதியாக இருந்துவந்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஆளுநரிடம் புகார் அளிக்க எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தலைமையில் குழுவை அனுப்பி வைத்துவிட்டு, இவரே செய்தியாளர்களை சந்தித்து விஷயத்தை தெரிவித்தார். அப்போது நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவி ஒருவர் அண்ணாமலை காலில் விழுந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
போராட்டம் இல்லை
இதன்பின்னர் கபடி போட்டி, மோடி பிறந்தநாள் விழா என அமைதியாக செயல்பட்ட அண்ணாமலை, ஆக்ரோஷ அரசியலை கைவிட்டு எல் முருகன் பாணியிலான சர்ச்சை அரசியலை கையில் எடுத்துள்ளார். திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடாத நிலையில், இந்து மதம் பற்றி ஆ.ராசா பேசிய பேச்சை ட்விட்டரில் பதிவிட்டு கண்டனம் தெரிவிக்க, அதன் பின்னர் போராட்டம் நடத்தப் போவதில்லை. மக்களை சந்தித்து கையெழுத்து பெறப்போகிறோம் என்று புதிய பாதையை தொடங்கியுள்ளார்.
புதிய யுக்தி
இதன் மூலம் எல் முருகன் வேல் யாத்திரை நடத்தியது போல், அண்ணாமலையும் ஒரு யாத்திரையை தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா வரவுள்ள நிலையில், கட்சியில் நிர்வாக ரீதியாகவும், நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டும் அண்ணாமலை யுக்தியில் இன்னும் பல மாற்றங்கள் வரும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.