அன்று திருமாவளவன்.. இன்று ஆ.ராசா.. பாஜகவால் குறிவைக்கப்படுகிறாரா? சமூக வலைதளத்தில் பெருகும் ஆதரவு!
சென்னை: மனுதர்மம் விவகாரத்தில் பாஜகவால் திருமாவளவன் குறி வைக்கப்பட்டது போல், இந்து மதம் விவகாரத்தில் ஆ.ராசா குறி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.
2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர், பாஜக - திமுக இடையே கருத்து மோதல் அதிகரித்துள்ளது. திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று பாஜக தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது ஆ.ராசா பேசுகையில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான், நீ பஞ்சமன்தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டதகாதவன் தான். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

ஆ.ராசாவுக்கு பாஜக கண்டனம்
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி, தமிழக பாஜகவின் அனைத்து தலைவர்களும் பேச்சு ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்துக்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அவதூறாக பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக கண்டனம்
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன், அசோக் நகர் காவல் நிலையத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தி உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர். இதனிடையே ஆ.ராசாவுக்கு எதிரான பிரச்சினையை, அதிமுகவும் கையில் எடுத்துள்ளது. இன்று மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு உள்ளிட்ட ஏராளமானோர் ஆ.ராசா பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஆ.ராசாவுக்கு ஆதரவு
ஆனால் ஆ.ராசா தவறாக எதுவும் பேசவில்லை, இந்து மதத்தில் என்ன உள்ளதோ அந்த கருத்தைதான் பேசி இருக்கிறார் என்று பெரியார் ஆதரவு அமைப்புகள், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் 2020ம் ஆண்டு அக்டோபரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறி வைக்கப்பட்டது போல் ஆ.ராசா குறி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அன்று திருமா, இன்று ஆ.ராசா?
திருமாவளவன் மனுதர்மம் பற்றி பேசிய கருத்தை, பெண்களுக்கு எதிராக பேசியதாக திரித்து கூறப்பட்டு சர்ச்சையாகியது. அதற்கு திருமாவளவன் மனுதர்மத்தை தடை செய்ய வேண்டும் என்று கடுமையான எதிர்வினையாற்றி பதிலடி கொடுத்தார். இதனால் திருமாவளவன் போல் ஆ.ராசாவும் சரியான பதில் அளிக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications