அட்ரா சக்க.. 25 வருட திமுக கோட்டையில் கால் பதிக்கிறதா பாஜக? உத்தேச தொகுதிகள் பட்டியல்
சென்னை: அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் அதிகாரப்பூர்வமற்ற, உத்தேச பட்டியல் என்ற தலைப்பில் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியல் வலம் வருகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, தொகுதி விவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று வெளியாகியிருக்கும் உத்தேச தொகுதிகள் பட்டியலில் பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளை அதிமுக வழங்கியுள்ளதாக தெரிகிறது.
அதில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, திருவண்ணாமலை, திருவையாறு, திருவாரூர், ராஜபாளையம், திருநெல்வேலி, திருச்செந்தூர், பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, பழனி, ராசிபுரம் (தனி), ஒட்டன்சத்திரம், வேப்பனஹள்ளி, தளி, கோவை வடக்கு, சிங்காநல்லூர், உதகமண்டலம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், சத்தமே இல்லாமல் பாஜக ஏற்கனவே தங்கள் தேர்தல் பணிகளை துவங்கிவிட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள உத்தேச தொகுதிகள் பட்டியலில் 25 வருடங்களாக திமுக கோட்டையாக வலம் வரும் திருவாரூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2019ல் திமுகவின் பூண்டி கலைவாணன் கிட்டத்தட்ட 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வென்றார். அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம் பெற்ற வாக்குகளை (53,045) விட, இந்த வெற்றி வித்தியாசம் அதிகம். 1996 முதல் இங்கு திமுக மட்டுமே வெற்றிப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், பாஜகவுக்கு திருவாரூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும், அதிகாரப்பூர்வ தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்ட பிறகே எதுவும் உறுதியாக தெரியவரும்.