மதுரையில் எச் ராஜா கைது.. சேலத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு.. மாநிலம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையை தடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக கூறி தமிழக அரசை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் மதுரையில் எச் ராஜா கைது செய்யப்பட்டார். சேலத்தில் போலீசார் -பாஜகவினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மெத்தனால் கலந்த சாராயம் பாக்கெட்டுகளை வாங்கி அவர்கள் குடித்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். திடீர் வாந்தி, மயக்கம், வயிற்றெச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Kallakurichi liquor death BJP will be protest all over Tamil Nadu on today

இதையடுத்து அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு பலர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக தற்போது வரை 52 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 100க்கும் அதிகமானவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பான எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ளன. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்ட தலைவர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பங்கேற்றார். இதையடுத்து எச் ராஜா உள்பட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்ய பாஜகவினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் கூட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை கலைந்தும்படி போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து பாஜகவினரை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் பாஜகவினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் பாஜக நிர்வாகிகளை கைது செய்தனர்.

முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்கனவே விடுத்த அறிக்கையில், "கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயத்தினால் உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச் சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதல்வராக தொடர தனக்குத் தார்மிக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+