கொரோனா கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு நடவடிக்கைக்கு பாஜக முழு ஒத்துழைப்பு தரும்- நயினார் நாகேந்திரன்
சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும், பாஜக ஒத்துழைப்பு அளிக்கும் என்று அந்தக் கட்சியின் சட்ட சபை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று மருத்துவ வல்லுநர்கள் உடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த ஆலோசனையின்போது ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சட்டமன்ற குழு உடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் சட்டசபை அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பாஜக பங்கேற்பு
பாஜக சார்பில் அதன் குழு தலைவரான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, அவர் கூறியதாவது: கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாஜக ஆதரவு தெரிவிக்கும்.

மருந்துகள் இருப்பு
ரெம்டிசிவர் மருந்து மற்றும் கருப்பு பூஞ்சை நோயை தடுக்க கூடிய ஊசி ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் பொருளாதாரரீதியாக மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

கிராம நிலவரம்
கிராமப்புறங்களில் தற்போது தொற்று அதிகமாக இருக்கிறது . கிராமப்புறத்தில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதற்காக அங்குள்ள பள்ளிகளில் தனிமைப்படுத்துதலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கையை முன்வைத்தோம்.

பணியாளர்கள்
மின்சார வாரியத்தை சேர்ந்தவர்கள், தீயணைப்பு படையினர் , வீடுகளுக்கு எரிவாயு டெலிவரி செய்பவர்கள், ஆகியவற்றை முன் களப்பணியாளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டு உள்ளோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications