”புதுமைபெண் வங்கி” இல்லாத பேங்க் பெயரில் 5 லட்சம் காப்பீட்டு போலி செக்..திமுகவிடமே சிக்கிய பாஜகவினர்
சென்னை : பாஜகவுக்கு வாக்களித்தால் 5 லட்சம் காப்பீடு என வடிவேலு காமெடியில் வரும் மாரியம்மன் இண்டியன் பேங்க் போல, புதுமைப்பெண் வங்கி என்ற போலியான வங்கியின் பெயரில் செக் தயாரித்து திமுகவினரிடமே காசோலை வழங்கிய பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு பிரச்சாரம் தீவிரமடைந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

ஓய்ந்தது பிரச்சாரம்
நாளை மறுதினம் அதாவது 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தின் சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக வந்த புகார்களை அடுத்து தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறையினர் உள்ளிட்ட பலர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களில் பரிசு பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில், சென்னையில் புதுமைப் பெண் வங்கி என்ற இல்லாத வங்கியின் பெயரில் பாஜகவினர் 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என பொதுமக்களுக்கு போலி செக் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைந்த நிலையில், முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் அதிகாரிகளை விட மற்ற கட்சியினர் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். வீதி வீதியாக பணப்பட்டுவாடா நடக்கிறதா எனவும் பல்வேறு கட்சியினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காப்பீட்டுக்கு போலி செக்
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு பகுதியில் நூற்றி 10வது வார்டு பாஜக சார்பில் வேட்பாளராக மருத்துவர் ராஜசேகர் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாஜகவுக்கு வாக்களித்தால் 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என மாதிரி காசோலைகளை கொடுத்துக் கொண்டிருந்தனர். புதுமைப்பெண் வங்கி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு இருந்த அந்த காசோலையில் கொடுப்பவர் பெயரில் வேட்பாளரான டாக்டர் ராஜசேகர் கவுன்சிலர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பாஜகவினர் கைது
இது குறித்த தகவல் அப்பகுதியில் பரவிய நிலையில் புஷ்பா நகர் பகுதிக்குச் சென்ற பாஜகவினர் அங்கிருந்த திமுகவினரிடமே வாக்களர்கள் என நினைத்து போலி காசோலைகளை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர் கையும் களவுமாக சிக்கிய பாஜக தொண்டர்கள் 3 பேரை பிடித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஜக தொண்டர்கள் 3 பேர் பெண்கள் இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications