“புதுசு புதுசா”.. பாஜக ஆட்சியில் வேலைக்கு செல்லும் பெண்கள் குறைந்தது நல்லதாம் - சொல்கிறார் நாராயணன்
சென்னை: பாஜக ஆட்சியில் வேலைக்கு செல்லும் பெண்கள் குறைந்துவிட்டதாக கனிமொழி கூறியது உண்மைதான் என்றும், அது நாடு வளர்ச்சிப்பாதையில் செல்வதை குறிப்பதாக பாஜக நாராயணன் தெரிவித்து உள்ளார்.
"பாஜக ஆட்சியில் இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாக குறைந்து விட்டது. ஆனால், இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் 43 சதவீத பெண்கள் வேலைக்கு செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள் என்று பெருமையாக பேசக்கூடிய நிலை உள்ளது" என்று நேற்று திமுகவின் கனிமொழி அவர்கள் கூறியுள்ளார். அவர் சொன்னது உண்மை தான். ஆனால், அவர் சொன்ன வேலையானது பெண்கள் தினசரி தங்களின் உழைப்பை செலுத்தி வருவாய் ஈட்டும் தற்காலிக அல்லது கூலி வேலை என்பதே உண்மை.

அவர் குறிப்பிட்டதை விட அதிக அளவில் பெண்கள் வேலைக்கு செல்வது தற்போது குறைந்து விட்டது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, 31 சதவீத இந்திய பெண்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது 19 சதவீதத்தினரே கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் வேலைக்கு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் குடும்பத்தினருக்காக கடுமையாக உழைத்து தங்கள் குழந்தைகளை பாதுகாத்து வளர்க்கும் ஒப்பற்ற கடமையை செய்து கொண்டிருக்கும் பெண்கள், தங்களின் குடும்பங்கள் நிதி சுமையில் இருக்கும் போதெல்லாம் அன்றாட வேலைக்கும் சென்று குடும்ப பாரத்தை தாங்குவதற்காக பொருளீட்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆனால், கனிமொழி அவர்கள் கூறியது போல் கடந்த பத்து வருட பாஜக ஆட்சியில் பெண்கள் இந்த வேலைகளுக்கு செல்லும் நிலை குறைந்துள்ளது என்பது, நிதி சுமையில் இருந்து இந்தியப் பெண்கள் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதையும், நம் நாடு வளர்ச்சி பாதையில், பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதையுமே குறிக்கிறது. மேலும், குடும்ப ஏழ்மையின் காரணமாக கல்வி கற்பதை நிறுத்தி வேலைக்கு செல்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி பயில்வதை இடையில் நிறுத்திய மாணவிகள் தற்போது படிப்பை தொடர்ந்து, கல்வி கற்ற பின்னர் தொழில் முனைவோராக, பெரு நிறுவனங்கள், அரசு பணிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இணைந்து ஊதியம் பெறுகிறார்கள் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெளிவுபடுத்துகிறது.
அதே போல், இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் 43 சதவீத பெண்கள் வேலைக்கு செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள் என்று கனிமொழி அவர்கள் கூறியது வியப்பளிக்கவில்லை. மாறாக வருத்தத்தையே அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள குடும்பங்களில் கடும் நிதி சுமை இருப்பதையே இது உணர்த்துகிறது. மது மட்டுமே இந்நிலைக்கு காரணம் என்று சிறு குழந்தை கூட சொல்லி விடும். குடிமகன்களின் அன்றாட வருமானத்தில் பெரும்பகுதி 'டாஸ்மாக்கில்' செலவிடப்படுவதால், குடும்ப நிதி நிலை சீரழிந்து, அக்குடும்பத்தின் அன்றாட செலவுகளை எதிர்கொள்ள பெண்கள் வெளியில் வேலைக்கு செல்லும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை கனிமொழி புரிந்து கொள்வாரா?

பெண்கள் தாராளமாக வேலைக்கு செல்லட்டும். ஆனால், படித்து, பட்டம் பெற்று அதிகாரிகளாக, ஆசிரியர்களாக, அரசு பணியாளர்களாக, கனிமொழி அவர்களை போன்று அரசியல்வாதிகளாக ஆகட்டும். குடும்ப பாரத்தை சுமக்கும் அவர்கள் நிதி சுமையை சுமப்பதற்காக கடினமான வேலைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை அகலட்டும். இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் தமிழகத்தில் தான் உள்ளனர் என்று மதுவினால் ஏற்படும் தீமையை உணர்ந்து விளக்கிய கனிமொழி அவர்கள், 43 சதவீத தமிழக பெண்கள் வேலைக்கு செல்வது பெருமை அல்ல கொடுமை என்பதை உணர்வாரா? தமிழக அரசுக்கு உணர்த்துவாரா?" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications