சென்னையில் சாலையில் துள்ளி குதித்த மீன்கள்... பிடித்து குழம்பு வைத்து ருசி பார்த்த சிறுவர்கள்..!
சென்னை: சென்னை தியாகராயர் நகர் அரங்கநாதன் சப்வே அருகே, சாலையில் துள்ளிக்குதித்த மீன்களை அப்பகுதி சிறுவர்கள் ஆர்வமுடன் பிடித்து வீட்டில் குழம்பு வைத்து ருசி பார்த்த நிகழ்வு நடந்துள்ளது.
சென்னை முழுவதும் நேற்றிரவு பெய்த இடைவிடாத கனமழையால் நகரின் பல்வேறு இடங்கள் குளம் போல் காட்சியளிக்கின்றன. அந்த வகையில் தி.நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகே உள்ள கோயில் குளம் ஒன்று நிரம்பி அதிலிருந்து வெளியேறிய தண்ணீரில் மீன்களும் சேர்ந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த மீன்கள் அரங்கநாதன் சப்வே சாலையில் ஓடிய நீரில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்திருந்ததை பார்த்த அப்பகுதி சிறுவர்களும், இளைஞர்களும் ஆர்வமுடன் மீன்களை பிடிக்கத் தொடங்கினர். கெண்டை மற்றும் குறவை மீன்களை பிடித்த சிறுவர்கள் அதை வீட்டில் கொடுத்து குழம்பு வைத்து ருசி பார்த்த நிகழ்வும் நடந்திருக்கிறது. தலா 10 மீன்கள் வரை ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்திருந்த நெகிழி பைகளில் பிடித்துச் சென்றிருக்கின்றனர்.
சிலருக்கு சின்ன மீன்களும் சிலருக்கு குழம்பு வைப்பதற்கு ஏதுவான அளவில் மீன்களும் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு போட்டியாக பெரியவர்களும் மீன் பிடித்ததை பார்க்க முடிந்தது.
சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நின்றதால் அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே போக்குவரத்தை சீர் செய்ய வேண்டி மாநகராட்சி சார்பில் ராட்சத மோட்டார் வைத்து தேங்கி நின்ற தண்ணீர் உறிஞ்சி வெளியேற்றப்பட்டன.

கனமழையால் கோயில் குளத்திலிருந்து மீன்குஞ்சுகளும், மீன்களும் பெருமளவில் வெளியேறியதை தொடர்ந்து அங்கு மீண்டும் மீன்குஞ்சுகள் விடப்படும் எனத் தெரிகிறது. ஒரு பக்கம் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போராடிக் கொண்டிருக்க மற்றொரு புறம் மழையையும், மழைநீரையும் ரசித்து அதில் நீச்சல் அடித்து சிறுவர்கள் மகிழ்ந்த காட்சிகளும் சென்னையில் அரங்கேறியுள்ளன.
சென்னையின் பிரதான சாலையில் ஓடிய மழை வெள்ள நீரில் மீன் பிடிக்கப்பட்ட நிகழ்வு இதுவே வரலாற்றில் முதல்முறையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனிடையே மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும், தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டும் அதை பெரும்பாலானவர்கள் செவிமடுத்ததாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications