கலைஞரும் தமிழும் போல வாழுங்கள்..ஒபிஎஸ்-இபிஎஸ் போல வாழ்ந்து விடாதீர்கள்..மணமக்களுக்கு உதயநிதி அட்வைஸ்
சென்னை: பொதுவாக திருமண விழாவிலே மணமக்களை வாழ்த்தி பேசும் போது மணமக்கள் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள். கலைஞரும் தமிழும் போல வாழுங்கள் என சொல்லி வாழ்த்துவார்கள். முதல்வர் ஸ்டாலினும் உழைப்பும் போல வாழுங்கள் என வாழ்த்துவார்கள். நான் மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் என ஒன்பது ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி ஆறாவது மண்டலம் கொசப்பேட்டை பகுதியில் 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.
அதன்பிறகு முதல் கட்டமாக ஒன்பது ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தனியார் மண்டபமாக இருந்தால்
திருமண மண்டபம் நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டு இருக்கிறது. தனியார் மண்டபமாக இருந்தால் பல லட்சம் ரூபாய் வாடகை கட்டணமாக வசூலிப்பார்கள். ஆனால் ஏழை, நடுத்தர மக்களும் பயன்பெறும் வகையில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது இந்த திருமண மண்டம் திறக்கும் விழாவில் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் வாய்ப்பையும் எனக்கு வழங்கியுள்ளார்கள். வழக்கமாக பெற்றோர்கள்தான் சீர்வரிசை தருவார்கள்.

அரசியல் பேசாமல் போக முடியாது
ஆனால் மணமக்களுக்கு உற்றார் உறவினர்களாக இருந்து கட்டில், மெத்தை, பீரோ என சீர்வரிசையை வழங்கியிருக்கிறார்கள். பொதுவாக திருமண விழாவிலே மணமக்களை வாழ்த்தி பேசும் போது மணமக்கள் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்த்துவர்கள். 'கலைஞரும் தமிழும் போல' வாழுங்கள் என சொல்லி வாழ்த்துவார்கள். 'முதல்வர் ஸ்டாலினும் உழைப்பும் போல' வாழுங்கள் என வாழ்த்துவார்கள். நான் மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். தாய்மார்கள் எல்லாம் வந்து இருக்கிறீர்கள்... உங்களிடம் அரசியல் பேசாமல் போக முடியாது.

எடப்பாடி - ஓ பன்னீர் செல்வம் மாதிரி
உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று.
தயவு செய்து எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம் மாதிரி வாழ்ந்து விடாதீர்கள். சுய மரியாதை விட்டு கொடுத்துறாதீங்க..உங்களுக்கு என்ன வேணுமோ அதை கேட்டு பெற்று விடுங்கள். உங்களுக்கு நியாபகம் இருக்கும் நான் சட்டமன்றத்தில் பேசும் போது சொன்னேன்... நீங்கள் இரண்டு பேரும் (ஓபிஎஸ் -இபிஎஸ்) தவறுதலாக என்னுடைய காரில் ஏறச்சென்றீர்கள். என்னோட கார்தான் தாரளமாக எடுத்துக் கொண்டு செல்லுங்கள்..நான் எதுவும் நினைக்க மாட்டேன்.

கமலாலயம் போயிட்டு வந்து இருக்கிறார்கள்
ஆனால், கமலாலயத்திற்கு மற்றும் சென்று விடாதீர்கள் என்று சொன்னேன். ஆனால் எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என அண்ணன் ஓ பன்னீர்செல்வம் சொன்னார். ஆனால் இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு கமலாலயம் போயிட்டு வந்து இருக்கிறார்கள். கேடுகெட்ட வெட்கமில்லாத ஒரு எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. இதற்கு மேல் அவர்களை நான் பேச விரும்பவில்லை" என்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications