இப்பதான் நிம்மதியா இருக்கு! பிராட்வே பேருந்து நிலைய மாற்றம் நிறுத்தி வைப்பு! எம்டிசி சொன்ன தகவல்!
சென்னை: சென்னை மாநகரின் இதயப்பகுதியாக கருதப்படும் பிராட்வே பேருந்து நிலையம் உடனடியாக மாற்றப்படமாட்டாது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களால் பேருந்து நிலைய மாற்ற திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் அனைத்தும், ஜனவரி 7, 2026 முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதனால் பிராட்வே வழியாக தினமும் பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் குழப்பமும், அச்சமும் நிலவியது. குறிப்பாக வட சென்னை, மத்திய சென்னை மற்றும் பிராட்வே சுற்றுப்புற சந்தைப் பகுதிகளுக்குச் செல்லும் மக்கள், மாற்று பேருந்து நிலையங்கள் தூரமாக இருப்பதால் நேரமும் செலவும் அதிகரிக்கும் என கவலை தெரிவித்திருந்தனர்.

அதே சமயம், பிராட்வே பேருந்து நிலையம் பாரிமுனை, ஜார்ஜ் டவுன், மின்ட், வண்ணாரப்பேட்டை போன்ற முக்கிய வர்த்தக மற்றும் தொழில் பகுதிகளுக்கு நேரடி இணைப்பை வழங்கி வருகிறது. இந்த நிலையம் மாற்றப்படும் செய்தி, அந்த பகுதிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்நிலையில், எம்டிசி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், நிர்வாக காரணங்களால் பேருந்து நிலைய மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதுவரை, வழக்கம்போல் அனைத்து மாநகர மற்றும் புறநகர் பேருந்துகளும் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையினரின் தகவலின்படி, பேருந்து நிலைய மாற்றத்திற்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பயணிகள் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் குறித்து மேலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் முடிவடைந்த பிறகே இறுதி தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியாகியதையடுத்து, தினசரி பேருந்து பயணிகள் சமூக வலைதளங்களில் நிம்மதி தெரிவித்துள்ளனர். தூரத்திலுள்ள மாற்று நிலையங்களுக்கு சென்று பேருந்து பிடிக்க வேண்டிய சிரமத்திலிருந்து தற்காலிகமாக விடுபட்டோம் என்று பலரும் கருத்து பதிவு செய்துள்ளனர். அதேசமயம், எப்போது மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற பற்றிய தெளிவான தகவலை முன்கூட்டியே வழங்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பிராட்வே பேருந்து நிலையம் வழக்கம்போல தொடரும் என்பதால், பயணிகள் தங்களது தினசரி பயணங்களை எந்த மாற்றமும் இன்றி மேற்கொள்ளலாம் என எம்டிசி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications