முலாயம் கோட்டையில் டிம்பிள்.. நிதீஷுக்கு அக்னி பரிட்சை! தொடங்கிய 5 மாநில இடைத்தேர்தல்-ஏன் முக்கியம்?
சென்னை: குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவோடு சேர்த்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 7 இடங்களில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அத்துடன் குஜராத்தில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான இன்று உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.
குஜராத் சட்டசபை தேர்தல்.. இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.. மும்முனை போட்டி!
இடைத்தேர்தல்
அதன்படி இன்று ஒரு லோக்சபா தொகுதி மற்றும் 6 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மக்களவைத் தொகுதி மற்றும் 2 சட்டசபைத் தொகுதிகள் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு உட்பட்டவை.
3 மாநிலங்கள்
ராஜஸ்தான் மாநிலம் சர்தார்சஹார், ஒடிசா மாநிலம் பாதம்பூர், சத்தீஸ்கர் மாநிலம் பானுபிரதாபூர் ஆகிய 3 சட்டசபைத் தொகுதிகளில் எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள் உயிரிழந்ததன் காரணமாக அங்கு தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது.
பீகார் இடைத்தேர்தல்
இது அல்லாமல் பீகாரின் குர்ஹானி சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் இன்று நடைபெற உள்ளது. குர்ஹானி தொகுதியில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏவாக இருந்தவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
நிரூபிப்பாரா நிதீஷ்?
தற்போது இந்த இடைத்தேர்தலில் மகாத்பந்தன் கூட்டணி சார்பாக நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளரும் பாஜக வேட்பாளரும் போட்டியிடுகின்றன. பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து நிதீஷ் குமார் கட்சி வெளியான பிறகு இருவரும் மோதிக்கொள்ளும் தேர்தல் இது என்பதால் இதன் முடிவில் அதிகபட்ச எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கிறது.
உபியின் 2 சட்டசபை தொகுதிகள்
இதன் மூலமாக மக்களின் மனநிலை மற்றும் நிதீஷ் குமார், தேஜஸ்வி யாதவ் கூட்டணியின் பலம் என்னவென்று தெரியவரும். இது அல்லாமல், உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் சதார் சட்டசபைத் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆஜம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் அந்த பதவியை இழந்தார்.
பாஜக, சமாஜ்வாடி
அதேபோல் உத்தரப்பிரதேசத்தின் கடவ்லி தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த பாஜகவை சேர்ந்த விக்ரம் சிங் சைனி முசாபர்நகர் கலவர வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் பதவியை இழந்தார். இதனை தொடர்ந்து இந்த இடங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 2 கட்சிகளும் தங்கள் தொகுதிகளை தக்க வைக்க தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மெயின்பூரி லோக்சபா தொகுதி
இவை அனைத்தையும் விட நாடு முழுவதும் பலரால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இடைத்தேர்தல் உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்பூரி மக்களவைத் தொகுதிக்கானதுதான். அந்த தொகுதியில் எம்பியாக இருந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானதால், அது காலியானதாக அறிவிக்கப்பட்டது.
முலாயம் இடத்தில் டிம்பிள்
அவரது இடத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில் அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவின் மகள் டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். முலாயம் சிங் யாதவுக்கு ஏற்கனவே இருக்கும் பலத்த ஆதரவு மற்றும் அவரது மறைவால் மக்களுக்கு ஏற்பட்ட அனுதாபம் காரணமாக டிம்பிள் யாதவ் இதில் வெல்வது உறுதி என்றே பேசப்படுகிறது.
தேர்தல் முடிவுகள்
இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உபியில் மட்டுமே பாஜக ஆட்சி செய்கிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியும், பீகாரில் ஜேடியு, ஒடிசாவில் பிடியூ ஆட்சியும் உள்ளது. இந்த இடைத்தேர்தல்களால் எந்த ஆட்சியிலும் மாற்றங்கள் ஏற்படாது. ஆனால், 2024 லோக் சபா தேர்தலை உற்று நோக்கி வரும் மக்களுக்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஒருவித புரிதலை கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. குஜராத், இமாச்சல பிரதேச மாநில தேர்தல் முடிவுகளுடன் இந்த இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன.