"மனமார்ந்த வாழ்த்து".. மத்திய அமைச்சரவை மாற்றம்.. ஓபிஆர் சொன்ன ஒரு வார்த்தை.. வைரலாகும் டிவிட்!
சென்னை: மத்திய அமைச்சரவையில் அதிமுக எம்பி ஓ பி ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டது. இன்று புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர். இதில் 15 பேர் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று உள்ளனர்.
12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

அமைச்சரவை
இந்த நிலையில் புதிய மத்திய அமைச்சரவையில் அதிமுக எம்பி ஓ பி ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் மத்திய அமைச்சராக வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தீவிரமாக முயன்று வந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும் தனது மகன் ஓபிஆரை அமைச்சராக்க வேண்டும் என்று முயற்சிகளை செய்து வந்ததாக கூறப்பட்டது.

ரவீந்திரநாத்
ஆனால் கடைசியில் ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதிமுக கூட்டணிக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்படவில்லை. மாறாக பாஜக தமிழ்நாடு தலைவர் எல். முருகனுக்கு மட்டும் இணை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி
இந்த நிலையில் புதிய அமைச்சரவை குறித்து எம்பி ஓ பி ரவீந்திரநாத் ட்விட் செய்துள்ளார். அதில், பிரதமர் மோடியின் தொலைநோக்கு ஆட்சிக்கு கீழ் பதவி ஏற்கும் புதிய அமைச்சர்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவிக்கிறேன். அதோடு தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்வானதற்கும் வாழ்த்துக்கள் என்று ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.

உற்சாகம்
அமைச்சர் பதவி கிடைக்காததால் ரவீந்திரநாத் அதிருப்தியில் இருப்பதாக பல்வேறு செய்திகள் வந்தான். ஆனால் அப்படி அதிருப்தி எதையும் வெளிப்படுத்தாமல், எப்போதும் போல ரவீந்திரநாத் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை பாராட்டும் வகையிலும், புதிய அமைச்சர்களுக்கு மனமார வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். அதிமுக தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று சிவி சண்முகம் கூறியதால் இன்று அதிமுக - பாஜக கூட்டணியில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

கருத்து வேறுபாடு
இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி எப்போதும் போல தொடரும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். தற்போது ரவீந்திரநாத்தும் அமைச்சர் பதவி கிடைக்காத போதும் பாஜக தலைவரை வாழ்த்தி ட்விட் செய்துள்ளார். எந்த மனஸ்தாபத்தையும் வெளிக்காட்டாமல் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் பெரிதாக எந்த விதமான பிளவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications