செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா? சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருக்கு.. பாயிண்ட் பிடித்த தமிழக அரசு!
சென்னை: குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை என செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையின்போது இன்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி: அதேபோல செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், அரசியல் சட்டப் பிரிவுகளையும், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, அமைச்சரவையின் திருப்தி அடிப்படையில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும். அமைச்சரவைக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளுநருக்கு அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை என வாதங்களை வைத்தார்.
தமிழ்நாடு அரசு பரபர வாதம்: மேலும், ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் செயல்படுத்த முடியாது என்று அரசியல் சட்டம் தெரிவிக்கிறது. குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என வாதிட்டார்.
மேலும், தேர்ந்தெடுத்த வாக்காளர்களால் நீக்க முடியாத மக்கள் பிரதிநிதியை, நீதிமன்ற வழக்கு மூலம் நீக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். எம்.எல்.ஏ.க்களை விட அமைச்சர்கள் குறைவாகவே ஊதியம் பெறுவதாகவும், எம்.எல்.ஏ.க்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பெறுவதாகவும், அமைச்சர்கள் 76 ஆயிரம் ரூபாய் தான் பெறுகின்றனர் எனவும் அவர்களுக்கு பயண சலுகைகள் உள்ளன எனவும் தெரிவித்தார்.
இந்த கோ வாரண்டோ விசாரணைக்கு உகந்ததல்ல. ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாகச் செயல்பட முடியாது. அவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது என்றும் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
பதில் வாதங்கள்: அமைச்சரவை ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றாலும், சில விதிவிலக்குகள் உள்ளதாகவும், அதுபோன்ற சூழல் நிலவுகிறதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும் என எம்.எல்.ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல் பதில் வாதத்தை முன்வைத்தார்.
குற்றப் பின்னணி, சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநர் முதல்வருக்கு கடிதம் எழுதியதாகவும், அதன் பின் உரிய காரணங்களை குறிப்பிட்டு செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது எனவும், இந்த விவகாரத்தில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வராமல் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசியல் சட்ட விதிகளின்படி ஆளுநர் செயல்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
ஐகோர்ட் உத்தரவு: அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தரப்பில் பதில் வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசு பணியாற்ற முடியாது என்பதால் அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி முதல் முறையாக எழுந்துள்ளது. தன் கண்முன் நடக்கும் சட்டவிரோதங்களை கண்டு, சட்ட அதிகாரம் இல்லை என ஆளுநர் இருக்க முடியாது.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என முதல்வர் அறிவித்தார். ஆளுநரின் நம்பிக்கையை பெறாத நபர் அமைச்சராக நீடிக்க முடியாது என வாதங்களை வைத்தார்.
இதையடுத்து, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்ட ஐகோர்ட் நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்குகளின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications