ஆளுநரை பதவி நீக்கம் செய்ய முடியுமா? மாநிலங்களுக்கு மத்திய அரசு வைத்திருக்கும் பெரிய செக்
சென்னை: ஆளுநர் ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை தேவை என திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தால் முடியும். ஆனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மாநில சட்டசபையால் முடியாது.. இந்த விஷயத்தில் மத்திய அரசு வைத்திருக்கும் பெரிய செக் பற்றி பார்ப்போம்.
நமது அரசியலமைப்பு 25 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 61வது பிரிவின் குடியரசுத் தலைவரை நீக்க நாடாளுமன்றத்தால் முடியும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியும். இந்திய தேசத்திற்காக தலைவராக அதாவது குடியரசுத் தலைவராக உள்ள ஒருவரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தால் முடியும். அதாவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களும், மாநிலங்களவை எம்பிகளும் சேர்ந்து பதவி நீக்கம் செய்ய முடியும்.. ஆனால் இதுவரை அப்படி எந்த குடியரசு தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டது இல்லை.

அதேநேரம் இந்திய குடியரசுத் தலைவரை நியமிக்கும் எம்பிக்களுக்கு நீக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்களாக உள்ளவர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. ஆளுநரை நீக்கும் அதிகாரம் என்பது குடியரசுத் தலைவரிடம் தான் இருக்கிறது.. மத்திய அரசின் பரிந்துரையின்படி அவர் செயல்படுவதால் மத்திய அரசு தான் ஆளுநரை நியமிப்பது, நீக்குவதை செய்ய முடியும்.
நமது அரசியல் அமைப்பு சட்ட விதி 153ன் படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அரசியல் அமைப்பு சட்ட விதி 155ன் படி குடியரசுத் தலைவரால் மாநில ஆளுநராக நியமிக்கப்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரநிதி அல்ல.. இவர் மத்திய அரசின் பிரதிநிதியாக மாநிலத்தில் செயல்படுகிறார்..
அரசியல் அமைப்புச் சட்ட விதி 154ன் படி நிர்வாக அதிகாரம் ஆளுநரிடத்தில் உள்ளது. அதாவது நேரடியாகவோ அல்லது துணை அதிகாரிகள் மூலம் மறைமுகமாகவோ நிர்வாக கடமையாற்ற முடியும்.
அரசியலமைப்புச் சட்ட விதி 161 ன்படி மாநில ஆளுநர் குற்றவாளிகளின் தண்டனையை ஒத்தி வைக்கவும், தள்ளி வைக்கவும் மற்றும் குறைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் மரண தண்டனையை முழுமையாக மன்னிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. இந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே இருக்கிறது. மசோதாக்களை பொறுத்தவரை ஆளுநரால் நிறுத்தி வைத்துஅதை திருப்பி அனுப்ப முடியும். ஆனால் மீண்டும் அனுப்பினால் அதை கண்டிப்பாக ஒப்புதல் கொடுக்க வேண்டும். அதேநேரம் சில சிக்கலான மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.. குடியரசு தலைவருக்கு அனுப்பிய மசோதாக்களில் இவருடைய ஒப்புதல் தேவைப்படாது,
மாநிலத்தில் ஆளுநர்கள் என்பவர்கள் மத்தியில் ஆளும் அரசால் நியமிக்கப்படுவதால், மத்தியில் ஆளும் கட்சி, மாநிலத்தில் ஆண்டால் எந்த சிக்கலும் இருப்பது இல்லை.. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும், அந்த மாநில அரசுக்கும் முரண்பாடுகள் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே இந்த பிரச்சனை இருக்கிறது. ஆளுநர் என்பவர் நியமனத்தில் வருபவர் என்பதால் அவரை நீக்கும் அதிகாரத்தை மாநிலத்திற்கு வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றன. ஆனால் இதுவரை ஆண்ட காங்கிரஸ் கட்சியும் சரி, இப்போது ஆளும் பாஜகவும் சரி ஒப்புக்கொண்டதே இல்லை.
இதனிடையே மத்திய மாநில உறவுகளை ஆராய 1983 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்க்காரியா குழுவினை மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமைத்தார். அக்குழுவானது ஆளுநர் நியமனம் குறித்த சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதனை இப்போது பாப்போம்.
வெளி மாநிலத்தினைச் சார்ந்தவரே ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும். அண்மைக் காலம் வரை அரசியலில் ஈடுபட்டவரை ஆளுநராக நியமிப்பதை தவிர்க்க வேண்டும். ஆளுநரை நியமிப்பதற்கு முன் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோர் ஆளுநரின் அவசியம் சார்ந்த மாநிலத்தின் முதல்வரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.
ஆளுநர் பதவியிலிருந்து விலக்கப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ அதற்கான காரணங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். ஆளுநர் பதவியை வகிக்கின்றவர் ஆதாயம் தரும் எந்தப் பதவியையும் ஏற்கக்கூடாது என்ற மரபை உருவாக்க வேண்டும்.கோப்புகள் பற்றி விளக்கம் பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இதில் பாதி விஷயங்கள் நடைமுறையில் பின்பற்றப்படுவது இல்லை..
அதேநேரம் மாநில அரசுக்கு ஏதாவது இக்கட்டான சூழ்நிலையோ, இடர்ப்பாடோ ஏற்பட்டால் ஒழிய மாநில அரசுகளின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவது தவறு என்ற கருத்து மக்களிடையே உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, சட்டப்பேரவையில் இயற்றும் தீர்மானங்களுக்கு அம்மாநில ஆளுநர் ஆதரவளிப்பவராக இருக்க வேண்டுமே தவிர, அத்தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது .
மத்திய அரசு - மாநில அரசுக்கிடையே மோதல் போக்கை உருவாக்கும் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாநில சட்டசபைக்கு தரப்பட வேண்டும். மத்திய அரசும் தனது கைப்பாவையாக செயல்படுபவர்களை ஆளுநராக நியமிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.












Click it and Unblock the Notifications