"துண்டு" சேருது போல.. நச்சுன்னு "தாமரை" போட்ட அச்சாரம்.. நயினாரே சொல்லிட்டாரே.. திக் திக் கிளைமேக்ஸ்
பாஜக முடிவெடுப்பதை பொறுத்தே, ஓபிஎஸ்ஸும் தன் நிலைப்பாட்டை நாளை அறிவிப்பார் என்கிறார்கள்
சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில் பாஜக என்ன செய்ய போகிறது? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. ஓபிஎஸ்ஸும் தன்னுடைய முடிவை இன்று இரவுக்குள் அல்லது நாளைக்குள் அறிவித்து விடுவார் என்பதால், களம் அனலடித்து கொண்டிருக்கிறது.
வரும் இடைத்தேர்தலில் அதிமுகவில் 2 டீமுமே களமிறங்க போகிறது.. ஆனால், பாஜக கப்சிப் மோடிலேயே இருந்து வருகிறது.. எனினும், இந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? என்ற யோசனையும் அக்கட்சிக்கு எழாமல் இல்லை.
ஒவ்வொரு தேர்தலிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் வாக்குகளை பிரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது நாம் தமிழர் கட்சி.. பாஜகவை போலவே, காங்கிரஸையும் பொதுவான அரசியல் எதிரியாக கருதி வருகிறது.
ஐயோ! கன்பியூஷனா இருக்கே! ஓபிஎஸ்- இபிஎஸ் கோஷ்டிகளை சமாளிக்க இரு கடிதங்களை அனுப்பியதா மத்திய அரசு?
லேசில் விடுவாரா சீமான்
இந்த இடைத்தேர்தலிலும் அப்படித்தான் களமிறங்கி உள்ளது.. வேட்பாளரையும் அறிவித்துவிட்டது. இந்த தொகுதியில் ஓரளவு வாக்குகளையும் நாம் தமிழர் கடந்த தேர்தலில் பெற்றுள்ளது.. 3வது இடத்தையும் தக்க வைத்துள்ளது.. அதனால், இந்த முறை நாம் தமிழர் கட்சி 2வது அல்லது 3வது இடத்தை கூட தக்கவைக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.. எனவேதான், ஈரோடு கிழக்கு தொகுதியில், பாஜக நேரடியாகவே களத்தில் இறங்கி போட்டியிடலாம் என்ற முடிவை யோசித்து வருவதாக தெரிகிறது..
2 டீம்கள்
ஆனால், அதேசமயம், கூட்டணியில் உள்ள அதிமுகவையும், வரும் எம்பி தேர்தலையும் கணக்கில் வைத்து, அவசரப்பட்டு முடிவெடுக்காமல் தீவிர ஆலோசனையில் இறங்கி வருவதாகவும் சொல்கிறார்கள். இப்போதைக்கு கூட்டணியில் தனித்தனி நிலைப்பாடு நிலவி வருவதே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது எம்பி தேர்தலின் கூட்டணியிலும் எதிரொலிக்குமா என்ற கலக்கமும் சூழ்ந்துள்ளது.. எனவே, இந்த இடைத்தேர்தலில், அதிமுகவின் 2 டீம்களையும் இணைத்து ஆதரவளிக்கலாம் அல்லது அவர்கள் இணையவில்லை என்றாலும் நாமே களத்தில் இறங்கி போட்டியிடலாம் அல்லது யாருக்கும் ஆதரவின்றி ஒதுங்கிவிடலாமா? என்றெல்லாம் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்...
நைட் முடிவு
ஆனாலும், டெல்லி பாஜகவோ, எம்பி தேர்தலையே கணக்கு செய்து வருவதாக தெரிகிறது.. அநேமாக இன்று இரவுக்குள், தமிழக பாஜக தன்னுடைய முடிவை அறிவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக என்ன சொல்ல போகிறதோ? என்ற பதைபதைப்பில் ஓபிஎஸ்ஸூம் உள்ளதாக தெரிகிறது.. அதனால்தான் தன்னுடைய நிலைப்பாட்டை ஓபிஎஸ் நாளை அறிவிக்க போவதாக, தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.. அதாவது பாஜக தனது நிலைப்பாட்டை அறிவித்தபிறகு, ஓபிஎஸ் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்க போவதால் மிகுந்த எதிர்பார்ப்புகள் களத்தில் எழுந்துள்ளன..
வாசன் பளிச்
இப்படிப்பட்ட சூழலில்தான், நீலகிரி மாவட்ட பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள நடந்தது.. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக சட்டசபை குழு தலைவரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களுக்கு நயினார் பேட்டி தந்தார். அதில், தமிழகத்தில் பாஜக அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது... அதை நாங்கள் சொல்வதை விட, திமுக அமைச்சரே சொல்லியிருக்கிறார்.. ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஜிகே வாசனை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.
திக் திக் நிமிடம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் மாநில தலைவர் அண்ணாமலை எடுக்கும் முடிவிலேயே போட்டியானது இருக்கும்... நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் நாங்கள் ஏற்கனவே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளோம். வருகிற தேர்தலிலும் கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடும்போது நிச்சயம் தாமரை சின்னத்தில் இங்கு தேர்தலில் போட்டியிடுவோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது.,.. குறிப்பாக கஞ்சா மற்றும் போதை பழக்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாகவே உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
கமலாலயம் வாசல்
டாஸ்மாக் கடைகள் முன்பு பள்ளி, மாணவர்கள் பெண்கள் அதிகமாக நிற்பதை காண முடிகிறது. இது தொடர்பாக வீடியோ காட்சிகளும் வந்துள்ளது. இதுகுறித்து நான் பலமுறை சட்டசபையில் கருத்து தெரிவித்துள்ளேன். ஆனால் இதுவரை அதற்கு தீர்வு கண்டதாக தெரியவில்லை. எனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் நேரங்களை குறைப்பதுடன் மதுக்கடைகளையும் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.. ஆக, வரும் எம்பி தேர்தலிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்று இப்போதே அச்சாரம் போட்டு நயினார் சொல்லி உள்ளது கவனிக்கத்தக்கது.. அதேசமயம், இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் மாநில தலைவர் அண்ணாமலை எடுக்கும் முடிவிலேயே போட்டியானது இருக்கும் என்று கூறியிருப்பதால், கமலாலயத்தையே எதிர்நோக்கி பார்த்துள்ளது அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள்..!!