அப்பாவிடம் சொத்து வாங்கியிருக்கீங்களா..இப்படி செய்தால் பத்திரப்பதிவு ரத்து..ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை: நன்றாக கவனித்துக் கொள்வதாக கூறி கடைசி மகன் சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கி இருக்கிறார். ஆனால் சொன்னபடி அப்பாவை கவனிக்கவில்லை. இதனால் அந்த முதியவர் கோட்டாட்சியர் மற்றும் கலெக்டரிடம் முறையிட்டார். கடைசியில் நீதிமன்ற படியேறி இருக்கிறார். இதையடுத்து சொத்து பத்திரப்பதிவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வயதான காலத்தில் பெற்றோரை பார்த்துக் கொள்ளாவிட்டால், அவர்கள் தானமாக அளித்த சொத்தை திரும்ப பெற அவர்களுக்கு உரிமை உள்ளது. சொத்து பத்திரப்பதிவை ரத்து செய்யுமாறு கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியும். ஆனால் இங்கு ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர், உயர்நீதிமன்றம் வரை சென்று அதற்காக போராடி உள்ளார்

மத்திய அரசு ஓய்வுபெற்ற ஊழியர் பூபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார், அவர் தாக்கல் செய்த மனுவில், நான் மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவன். எனக்கு 4 மகன்கள், 2 மகள்கள் இருக்கிறார்கள்.
நான் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற போது எனக்கு கிடைத்த பணத்தை கொண்டு, சென்னை நீலாங்கரையில் ஒரு இடம் வாங்கினேன். என் மனைவி விபத்தில் இறந்து விட்டார். அப்போது என் கடைசி மகன், என்னை கடைசி காலம் வரை பார்த்துக்கொள்வதாக கூறி, நீலாங்கரை நிலத்தை என்னிடம் இருந்து என் கடைசி மகன் எழுதி வாங்கிகொண்டார்.
ஆனால் சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கி கொண்ட பின்னர் என்னை பார்க்கக்கூட வரவில்லை. சொத்தை பெற்றுக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார். எனவே மகனின் பெயருக்கு எழுதி கொடுத்த பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரி கிண்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்தேன்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, சொத்தை திருப்பிக்கொடுக்க தயாராக இருப்பதாகவும், ஆனால், நான் வாங்கும் கடனுக்கு பொறுப்பு ஏற்க முடியாது என்றும் என் மகன் பதில் அளித்தார். அப்படி சொல்லியும் பத்திரப்பதிவை ரத்து செய்ய கோட்டாட்சியர் மறுத்துவிட்டார் இதை எதிர்த்து நான் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை கலெக்டர் தள்ளுபடி செய்து விட்டார். எனவே என் மகனுக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரப்பதிவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் , தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது: " பெற்றோரை கடைசி காலத்தில் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கியிருப்பது உறுதியானால், அந்த சொத்தின் பத்திரப்பதிவை மூத்த குடிமக்கள் சட்டம் பிரிவு 21 (3)-ன்படி ரத்து செய்ய முடியும். ஆனால், இந்த சட்டப்பிரிவுக்கு எதிராக கலெக்டரும், கோட்டாட்சியரும் செயல்பட்டிருக்கிறார்கள்

இந்த விவகாரத்தில் சொத்தை எழுதி வாங்கிய மகனுக்கும், அவரது தந்தைக்கும்தான் பிரச்சினையே தவிர மற்ற மகன்கள், மகள்களுடன் பிரச்சினை இல்லை. எனவே, மனுதாரரின் கோரிக்கையை கலெக்டர், கோட்டாட்சியர் நிராகரித்து, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தை தோல்வி அடையச் செய்து விடக்கூடாது. எனவே, கலெக்டர் உத்தரவையும், நீலாங்கரையில் உள்ள நிலத்தை மகனுக்கு எழுதிக்கொடுத்த பத்திரப்பதிவையும் ரத்து செய்கிறேன்." இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறியுள்ளார்.
வயதான காலத்தில் பெற்றோரை சரியாக பார்த்துக் கொள்ளாவிட்டால், அவர்களிடம் இருந்து எழுதி வாங்கி சொத்துப்பத்திரப்பதிவை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்ய முடியும். ஆனால் அப்படி ரத்து செய்ய கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையிட்டு தான் தீர்வு பெற முடியும். காரணம் நியாயமாக இருந்தால் கண்டிப்பாக பத்திரப்பதிவை ரத்து செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பிப்பார். இப்படி பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications