7.5%இடஒதுக்கீட்டிற்கு திமுகவே காரணம்.. நீட் குழுவிற்கு எதிரான வழக்கு பாஜகவின் வன்மம்..அமைச்சர் மா.சு
சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வில் அரசு மாணவர்களுக்கு 7.5% கிடைக்க திமுகவின் முயற்சியே காரணம் எனத் தெரிவித்துள்ள சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், நீட் தேர்வு பாதிப்பு குறித்தே ஆராயக்கூடாது என்ற பாஜகவின் வழக்கு வன்மம் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்தக் குழுவிடம் நீட் தேர்வு தொடர்பாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நீட் தேர்வு பாதிப்புகளைக் கண்டறிவதற்காகக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அரசியல் உள்நோக்கம்
இந்நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் நீட் ஆய்வுக் குழுவுக்கு எதிராகத் தமிழ்நாடு பாஜக வழக்கு தொடர்ந்துள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்பது போல சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் பேசினார். ஆனால் நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு பாஜகவின் இரட்டை நிலைப்பாடு வெளியே வந்துள்ளது.

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைப் பிரமாண பத்திரமாகத் தாக்கல் செய்வோம். நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தே கேட்கவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மக்களின் கருத்துகள் தான் கேட்கப்பட்டு வருகிறது. இதற்கு நீதிமன்றங்கள் அனுமதி வேண்டுமா என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட விசாரணையில் பதிலளிக்கப்படும்.

இட ஒதுக்கீடு
அதிமுக ஆட்சியில் இருந்த போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை முதலில் வலியுறுத்தியது திமுக தான். அதிலும் நாங்கள் கேட்டது 10% இட ஒதுக்கீடு. அப்போதுகூட 45 நாட்களுக்கு மேல் ஆகியும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதைக் கண்டித்து தற்போதைய முதல்வர் போராட்டம் நடத்திய பின்னரே, ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனாலும் கூட நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு அதைவிட பெரிதாக உள்ளது. இதனால் 7.5% இட ஒதுக்கீட்டைத் தாண்டி அனைத்து மாணவர்களும் பயன் பெற வேண்டும் என இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் வன்மம்
நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு முழுமையாகப் பயன் கிடைக்க வேண்டும். கல்வி முறை, பயிற்சி என இதில் பல சிக்கல் உள்ளன. இதன் காரணமாகவே நீட் பாதிப்பு குறித்து ஆராய இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து அறிக்கை கிடைத்த பிறகு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். நீட் தேர்வு பாதிப்பு குறித்தே ஆராயக்கூடாது என்ற பாஜகவின் வழக்கு வன்மம் குறித்து நீதிமன்றம் மூலமாகவே தீர்வு கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications