சீமான் உள்ளிட்ட 231 பேர் மீது பாய்ந்தது வழக்கு! தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதற்காக ஆக்ஷன்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 231 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி அக்கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் அளித்த நிலையில், சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் நலன் போன்றவற்றை கருத்தில் கொண்டு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து தடையை மீறி வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியினர் குவிந்தனர். அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் மாநகராட்சி சமுதாயக் கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றிச் செல்லப்பட்டார்.
சீமானை போலீசார் கைது செய்யும்போது அவரது கட்சியை சேர்ந்த சிலர் கோஷமிட்டனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டு சிறிது நேரம் கழித்து மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த சீமான், "காவல்துறையினரின் நடவடிக்கை கொடுமையானது, தேவையற்ற ஒடுக்குமுறையாக எனது கைது நடவடிக்கையை பார்க்கிறேன். இதே இடத்தில் பல்வேறு போராட்டத்தை நடத்தி இருக்கிறோம், ஆனால் இன்று மட்டும் கைது செய்யப்பட்டுள்ளேன்.
போராட்டங்களுக்கு அனுமதியில்லை என்றால் எங்களிடம் காவல்துறையினர் முறையாக தெரிவிப்பார்கள். நாங்கள் எதற்காக போராட்டம் நடத்தினோம் என்பது கூட தெரிய விடாமல் தடுத்த காவல்துறையினரின் நடவடிக்கை கொடுமையானது" என்று சீமான் கூறினார்.
இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தடையை மீறி போராட முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 231 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications