ஓபிஎஸ், ஓபி ரவீந்திரநாத்திற்கு எதிரான வழக்குகள் ரத்து.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தேர்தல் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத்குமார் ஆகியோருக்கு எதிராக தேனி போலீசார் பதிவு செய்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோன்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்ட சபைக்கு நடைபெற்ற தேர்தலில் போடி தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியின்றி வென்றார். இருவருமே தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தங்கள் சொத்து விவரங்கள், கல்வி தகுதிகள் உள்ளிட்டவற்றை மறைத்து இருப்பதாகவும் இருவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேனியின் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவின் படி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர். தங்களுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஓ பன்னீர் செல்வமும் ரவீந்திரநாத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி என்.வெங்கடெஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ''மனுதாரர்களுக்கு எதிராக புகார்தாரர் தேனி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனுவுக்கு ஆதரவாக பிரமாண மனு எதையும் தாக்கல் செய்யவில்லை.
பிரமாண மனு இன்றி அளிக்கப்படும் புகார் மனுவையும் விசாரணைக்கு ஏற்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. எனவே, மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடுகிறேன்" என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications