இன்னும் மீளாத காவிரி டெல்டா.. ஒப்புக்கு வந்து போகும் தலைவர்கள்.. கடும் குமுறலில் மக்கள்
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு கூட திரும்பாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய மாவட்டங்களுக்கு அரசியல் தலைவர்கள் சும்மா ஒப்புக்கு சப்பாக வந்து போவதால் அப்பகுதி மக்கள் மனகுமுறலில் உள்ளனர். இது 20 தொகுதி இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
இயற்கை சீற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதனால் ஏற்படும் சேதங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் குறைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். உலகத்துக்கே சோறு போடும் விவசாயிகள் இன்று ஒரு வேளை உணவுக்காக அடுத்தவரை எதிர்பார்க்கும் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பதில்
மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்குவதற்கு ஒரு சிறிய குடிசை கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் போய் சந்தித்த வண்ணம் உள்ளனர். ஆனால் அதனால் ஏதாவது பிரயோஜனம் உண்டா என்றால் அதற்கு இல்லை என்பதே பதிலாக கூறமுடியும்.
ஆய்வு
அப்பகுதிக்கு செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்று முக்கியமான இடங்களுக்கு மட்டும் செல்கின்றனர். இல்லாவிட்டால் பட்டும் படாமல் எங்காவது சென்றுவிட்டு நானும் ஆய்வுக்கு போனேன் ... ஆய்வுக்கு போனேன் என கூறிக் கொள்வதில் என்ன பயன் உண்டு.
அரசியல்வாதிகள்
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலின் போது ஒரு முட்டு சந்தைகூட விடாத நம் அரசியல்வாதிகள் இதுபோன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முக்கிய இடங்களுக்கு மட்டும் செல்வது அப்பகுதி மக்களின் மனதை பாதிக்கிறது. பொதுத் தேர்தலை கணக்கில் வைத்து கொண்டு ஏதோ கல்லூரியில் வருகை பதிவேடு கட்டாயம் என்பார்களே, அதுபோல்தான் இவர்களும் போய் பார்த்துவிட்டு வருகின்றனர்.
எதிரொலிக்கும்
ஆனால் சந்து பொந்துகளில் சென்று பார்த்தால்தான் மக்கள் எத்தகைய துயரங்களை அனுபவிக்கிறார்கள் என்பது தெரியவரும். இது போன்ற பகுதிகளுக்கு இன்னும் அரசு அதிகாரிகளே இன்னும் வரவில்லை என்றே மக்கள் குறை கூறுகின்றனர். எனவே இவர்களது குமுறல்கள் யாருக்கு கேட்கிறதோ இல்லையோ 20 தொகுதிகளின் மக்களுக்கு கேட்டிருக்கும். நிச்சயம் இது திருவாரூர் இடைத்தேர்தலிலோ அல்லது பொது தேர்தலிலோ எதிரொலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.