ஜெயலலிதா மரண அறிக்கை.. சசிகலா மீது பரபர குற்றச்சாட்டு.. சிபிஐ விசாரணை வேண்டும்.. சீனில் வந்த ஜெ தீபா
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகலாவிடம் விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிபிஐ விசாரணை வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா கூறியுள்ளார்.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டுில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஜெயலலிதா முன்கூட்டியே இறந்ததை கண்டுபிடித்த 'எம்பாமிங் ' டாக்டர் சுதா சேஷய்யன்: ஆறுமுகசாமி ஆணையம்
சட்டசபையில் அறிக்கை தாக்கல்
இந்த ஆணையம் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், காவல்துறை உயரதிகாரிகள் உள்பட ஏராளமானவர்களிடம் விசாரணை நடத்தியது. 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதல் அமைச்சர் முக ஸ்டாலினிடம், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்தது.
ஆஞ்சியோ செய்யப்படவில்லை
இந்த ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அறிக்கையில், ‛‛ 22.09.2016 அன்று இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை. டாக்டர் ரிச்சர்டு பீலே, ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்தச் செல்ல தயார் என கூறியும் அது ஏன் நடக்கவில்லை. போயஸ் கார்டனில் மயங்கி விழுந்து ஜெயலலிதா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டதற்கு பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா இறந்த தேதி குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன என கூறப்பட்டுள்ளது.
சசிகலா உள்ளிட்டவர்கள் மீது விசாரணை
அதுமட்டுமின்றி ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள். 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.
ஜெ தீபா பேட்டி
இதுதற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. ஜெயலலிதாவுக்கு உரிய முறையில் சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்ற கேள்விகளை பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா சிபிஐ விசாரணை வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து ஜெ தீபா கூறியதாவது: தற்போதைய சூழலில் விசாரணை ஆணையமே மேல்பட்ட விசாரணை தேவை என பரிந்துரை செய்துள்ளது. ஆணையத்தின் பரிந்துரைக்கு முன்பே சிபிஐ விசாரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறினர்.
சசிகலா கட்டுப்பாட்டில் ஆட்சி
ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் சசிகலாவால் கட்டுப்படுத்தப்பட்ட அதிமுக ஆட்சி இருந்ததால் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை. அன்றைய ஆட்சி என்பது சசிகலாவால் வழிநடத்தப்பட்ட அதிமுக ஆட்சி. இதனால் இதனை முறையாக முன்னெடுக்க யாரும் முன்வரவில்லை. அதேநேரத்தில் ஓ பன்னீர் செல்வம் இந்த ஆணையத்தை நியமித்தார்.
உயிர் என்பது சாதாரண விஷயமல்ல
இந்த விஷயத்தில் நான் அரசியலுக்குள் போகவில்லை. ஆனால் அரசியல் காய்நகர்த்தலாக தான் பார்க்கப்பட முடிகிறது. ஆனால் அதையும் தாண்டியும் மனித உரிமையின் அடிப்படையில் ஒருவரின் உயிர் என்பது சாதாரண விஷயமல்ல. இயற்கையான மரணமா என்பதிலேயே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதுபற்றி விசாரிக்கப்படவில்லை என்பது தான் எனது குற்றச்சாட்டு.
ஆணையத்திடம் கூறியது என்ன?
2011 அல்லது 2012ல் அத்தை ஜெயலலிதா மட்டும் தனியாக சசிகலா குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அத்தை ஜெயலலிதாவுடன் அவரது குடும்பத்தினர் யாரும் இல்லை. உறவினர்கள், ரத்த சொந்தங்கள் யாரும் இல்லை. யாரையும் கிட்ட நெருங்கவே விடவில்லை. இதுபற்றி நான் கூறவேண்டியது இல்லை. இது அனைவருக்கும் தெரிந்தது. அதன்பிறகு சசிகலா குடும்பத்தினர் விலக்கி வைக்கப்பட்டனர். இதுபற்றி நான் ஆறுமுகச்சாமி ஆணையத்தில் குறிப்பிட்டு உள்ளேன். பெங்களூரில் சிறையில் ஒன்றாக இருந்தனர்.
கான்ஸ்பரஸி
2015ல் சசிகலா கணவர் நடராஜன் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது எத்தனை காலம் தான் இப்படியே கீழே இருக்கனும். மேலே வரவேண்டும் என பொங்கல் திருவிழாவில் தஞ்சாவூரில் அவர் கூறினார். இதெல்லாம் நடந்துள்ளது. இதனால் தான் அத்தை கோபமடைந்தார். இதில் கான்ஸ்பரஸி ஏற்பட்டு இருக்கலாம். இதனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி இருக்கலாம். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்க பிறகு கொடுத்த தகவல்கள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக தான் பார்க்கப்படுகிறது.
சிபிஐ விசாரணை வேண்டும்
அன்றைய காலக்கட்டத்தில் 2016 செப்டம்பர் 22ல் இரவு வரை உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறினார்கள். முதல் அமைச்சர் 10 ஆண்டுகளாக மிகப்பெரிய பாதிப்பு இருந்திருந்தால் அதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய பொறப்பு கட்சியின் மூத்த தலைவர்கள், அதிகாரிகளுக்கு இருந்திருக்க வேண்டும். இருப்பினும் ஜெயலலிதாவுக்கு எந்த உடல்நலக்குறைபாடும் உள்ளது என இதற்கு முன்பு எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை இருந்திருந்தால் ஏன் மறைத்தார்கள். எதற்காக மறைத்தார்கள். ஜெயலலிதாவுக்கு எந்த பெரிய நோயும் இல்லை. வயது ரீதியாக இருக்கும் சாதாரண பிரச்சனை தான் இருந்திருக்கிறது. இதனால் சிபிஐ விசாரணை வேண்டும்'' என்றார்.