சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. மீண்டும் தென்னிந்தியா ஆதிக்கம்.. சென்னைக்கு எந்த இடம்?
சென்னை: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எப்படி தென்னிந்திய மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தியதோ, அதேபோல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் தென்னிந்திய மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதில் சென்னை மண்டலம் 4வது இடத்தை பிடித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான பிப்.15ஆம் தேதி தொடங்கி மார்ச் 18ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை நாடு முழுவதும் மொத்தமாக 23 லட்சத்து 71 ஆயிரத்து 939 மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில் இன்று மதியம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதில் 22 லட்சத்து 21 ஆயிரத்து 636 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த கல்வியாண்டுடன் ஒப்பிடும் போது 0.05 சதவிகிதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் 92.63 சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எப்படி தென்னிந்திய மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தியதோ, அதேபோல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளிலும் தென்னிந்திய மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. அதன்படி 10ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் மண்டலம் 99.79 சதவிகிதம் தேர்ச்சியை பெற்று முதலிடத்தில் உள்ளது.
அதேபோல் விஜயவாடா மண்டலம் 99.79 சதவிகித தேர்ச்சியை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து பெங்களூர் மண்டலம் 98.90 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 3வது இடத்தில் உள்ள நிலையில், சென்னை மண்டலம் 98.71 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளது. இதன்பின் புனே மண்டலம் 96.52 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 5வது இடத்தை பிடித்துள்ளது.
அதேபோல் வடமாநிலங்களை பொறுத்தவரை டெல்லி மேற்கு மண்டலத்தில் 95.24 சதவிகித தேர்ச்சியும், பிரயாக்ராஜில் 91.01 சதவிகித தேர்ச்சியும், கவுகாத்தியில் 84.14 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேச மண்டலத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் குறைவாக இருந்த நிலையில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் சற்று கூடுதலாக உள்ளது.












Click it and Unblock the Notifications