சோகங்களையும் கொடுத்த 2022! மண்ணுலகை விட்டு பிரிந்த பிரபலங்கள்! லதா முதல் பெனடிக்ட் வரை.. ஒரு பார்வை!
சென்னை : 2023ஆம் ஆண்டு பிறக்க இருக்கும் நிலையில் 2022ஆம் ஆண்டு பல சோகங்களையும் தந்திருக்கிறது. இசைக்குயில் லதா மங்கேஷ்கர் முதல் போப் 16ஆம் பெனடிக்ட் வரை பல பிரபலங்கள் இந்த மண்ணுலகை விட்டு நீங்கி நீங்கா துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுள்ளனர்.
இன்னும் சில மணி நேரங்களில் 2022 ஆம் ஆண்டு நிறைவடைந்து, 2023ஆம் ஆண்டு பிறக்க இருக்கும் நிலையில் பல சோகங்களையும் இந்த ஆண்டு தந்திருக்கிறது.
இரண்டாம் ராணி எலிசபெத் முதல் பதினாறாம் பெனடிக்ட் வரை பலரும் 2022 ஆம் ஆண்டில் உயிரிழந்து பலத்த அதிர்ச்சியை மக்களுக்கு கொடுத்திருக்கின்றனர். அந்த வகையில் உலக அளவிலும் இந்திய அளவிலும் அதிர்ச்சி அளித்த பிரபலங்களின் மரணம் குறித்து பார்க்கலாம்..

லதா மங்கேஷ்கர்
தனது 13 வயது முதலே கிட்டத்தட்ட 80 ஆண்டு காலம் இந்திய இசை ரசிகர்களை தனது மனதை மயக்கும் குரலால் கட்டிப்போட்டிருந்தவர் லதா மகேஷ்கர். இந்திய சினிமாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட அவருக்கு பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே, பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டது. ஏறக்குறைய இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பாடி இருக்கும் அவர் கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி கொரோனா தொற்று காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ராணி இரண்டாம் எலிசபெத்
இந்த ஆண்டு உலகையே உலுக்கிய மரணங்களில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து வரலாற்றில் ஏன் உலக வரலாற்றிலேயே நீண்ட காலம் ராணியாக இருந்த அவர் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து முழுவதுமே சோகத்தில் மூழ்கியது. அவரது இறுதிச் சடங்கில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஷேர்ன் வார்ன்
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவும் இந்த ஆண்டு உயிரிழந்தார். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் 10 முறை 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற அசாத்திய சாதனையையும் படைத்திருக்கிறார். ஐபிஎல்-ன் முதல் கோப்பையை கைப்பற்றிய கேப்டன் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது. ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்து வந்தவர் தாய்லாந்து நாட்டில் தங்கி இருந்தபோது மாரடைப்பு காரணமாக மார்ச் 4ஆம் தேதி உயிரிழந்தார்.

பாடகர் கேகே
லதா மங்கேஷ்கருக்கு அடுத்து இசை உலகை சோகக் கடலில் மூழ்க வைத்தது கேகே என அழைக்கப்படும் பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மரணம். தமிழில் காதல் வளர்த்தேன், உயிரின் உயிரே, அப்படி போடு உள்ளிட்ட பல ஹிட் பாடல்களோடு தமிழ் இந்தி உள்ளிட்ட பல படங்களில் பாடிய அவர், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்த நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி இவ்வுலகை விட்டு பாடகர் கேகே மறைந்தார்.

முலாயம் சிங் யாதவ்
உத்திரபிரதேசம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபல மூத்த அரசியல் தலைவர் முலாயம் சிங் யாதவ். சமாஜ்வாதி கட்சி தலைவர் உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வராக மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் கவனிக்கத்தக்க நபராக இருந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் அக்டோபர் 11ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதை அடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் அவருக்கு இரங்கலை தெரிவித்தனர்.

சித்து மூஸ்வாலா
பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் 28ஆம் தேதியன்று சுட்டுக்கொல்லப்பட்டார். மன்சா மாவட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கியால் சுட்டதில் சித்து மூஸ்வாலா உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொன்ற கொலையாளி கோல்டி பிரார் அமெரிக்காவில கைது செய்யப்பட்டார்.

பிரதாப் போத்தன்
தமிழ் திரையுலகில் நடிகர் இயக்குனர் என பன்முகத்தோடு வலம் வந்த கலைஞரான பிரதாப் போத்தன் தனது 69ஆம் வயதில் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் மரணமடைந்தார். பிரதாப் போத்தனின் மறைவிற்கு இந்திய திரையுலகினர் பலரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்தனர். அதற்கு முன்னதாகவே தனது மரணம் குறித்து பிரதாப் போத்தன் எழுதிய கடைசி பதிவு அனைவரையும் உருக்கும் வகையில் இருந்தது. அவர் நடித்த என் இனிய பொன் நிலாவே பாடல் இப்போது வரைக்கும் பலது ஃபேவரைடாக உள்ளது.

பீலே
உலக அளவில் மிகப் பிரபலமான கால்பந்து ஜாம்பவானான பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலே தனது 82 வது வயதில் டிசம்பர் 30ஆம் தேதி காலமானார். கால்பந்து விளையாட்டின் மன்னன் என்றும் அழைக்கப்படும் அவர் உலகக்கோப்பை மூன்று முறை வென்ற ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். பிரேசில் அணிக்காக 95 போட்டியில் விளையாடிய அவர் 77 கோல்களை அடித்து கால்பந்து கடவுளாக போற்றப்படுகிறார். புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இந்த ஆண்டு இறுதியில் மரணம் அடைந்த முக்கிய பிரபலங்களில் ஒருவர்.

ஹீரா பென் மோடி
பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரான ஹீரா பென் மோடி தனது நூறாவது வயதில் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மகன் பிரதமராக இருந்தாலும் கடைசி வரை தனியாக எளிமையாக வாழ்ந்து வந்த பென் மோடி சிகிச்சை பலனின்றி டிசம்பர் 30ஆம் தேதி அதிகாலையில் மரணமடைந்தார். இதை அடுத்து அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அடுத்த சில மணி நேரங்களிலேயே பணிக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

போப் 16ஆம் பெனடிக்ட்
ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் போப் 16ஆம் பெனடிக்ட் உயிரிழந்தார். 2005 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவியேற்றார். ஆனால் 8 ஆண்டுகளிலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1415 ஆம் ஆண்டில் கிரிகோரிக்கு பிறகு அதாவது கடைசி 600 ஆண்டுகளில் தானாக பதவியிலிருந்து வெளியேறிய போப் அவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளாக தனது ஓய்வு காலத்தை வாடிகனில் உள்ள தேவாலயத்தில் கழித்து வந்த அவர் தனது 95 ஆவது வயதில் காலமானார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications