ரூ 1.50 கோடி பண மோசடி புகார்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி மீது பாய்ந்தது வழக்கு
சென்னை: தொழிலதிபர் ஒருவரிடம் பணமோசடி செய்ததாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தன்னிடம் கடனாகப் பெற்ற பணத்தை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிவானான்டி திருப்பித் தராமல் மோசடி செய்ததாக வி ஆர் கிருஷ்ணசாமி என்ற தொழிலதிபர் புகார் அளித்தார்.

அந்த புகாரில் "கடந்த 2015ஆம் ஆண்டு கடலூரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதாகக் கூறி 24% வட்டியில் ஒரு கோடி ரூபாயை சிவனாண்டி கடன் கேட்டார். இதையடுத்து அவரது பிஸ்னஸ் பார்ட்னர் கணபதி ராம சுப்பிரமணியத்திற்குப் பணம் அனுப்பினேன்.

இது தொடர்பான கடன் ஒப்பந்தமும் எனக்கும் கணபதி ராம சுப்பிரமணியத்திற்கும் இடையே போடப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் 24% வட்டியுடன் ஒரு கோடி ரூபாயைத் திருப்பி அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். இருப்பினும், தற்போது வரை அந்தத் தொகையைத் திருப்பி அளிக்கவில்லை.
முன்னதாக கடந்த 2002ஆம் ஆண்டும் நெல்லையில் கோலா பிளான்ட் அமைக்க இருவரும் என்னிடம் 50 லட்சம் கடனாகப் பெற்றனர். அந்தத் தொகையையும் என்னிடம் திருப்பி அளிக்கவில்லை" என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 1.50 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்று மோசடி செய்ததாகப் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி மீது ஐபிசி பிரிவு 420 கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல அவரது பிஸ்னஸ் பார்ட்னர் கணபதி ராம சுப்பிரமணியம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை முடக்கிய 4.24 கோடி ரூபாய் சொத்தை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாகக் கணபதி ராமசுப்பிரமணியத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சனிக்கிழமை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications