திமுகவா? அதிமுகவா? யார் காரணம்? - ஜல்லிக்கட்டு தீர்ப்புக்காக மல்லுக்கட்டும் கட்சிகள்
சென்னை: ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வரலாற்று தீர்ப்பை வழங்கி இருக்கிறது அரசியல் சாசன அமர்வு. இந்த வெற்றிக்கு நாங்கள்தான் காரணம் என்கிறது திமுக. இல்லை எங்களது முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்கிறது அதிமுக.
இதில் எது உண்மை? என அறிவதற்காக முதலில் கார்த்திகேய சிவசேனாதிபதியிடம் பேசினோம். அவர், "ஜல்லிக்கட்டு தமிழர்களின் 5 ஆயிரம் ஆண்டுகால நாகரிகத்தின் தொடர்ச்சி. அதை ஆராய்ச்சி ரீதியாக நாம் நிரூபித்திருக்கிறோம்.

ஆராய்ச்சி சொல்வது என்ன? ஐராவதம் மகாதேவன், ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், உதயசந்திரன் ஐஏஎஸ், அஸ்கோ பர்போலா போன்ற பெரிய மானுடவியல் ஆய்வாளர்கள் எல்லோரும் இதை தங்களது ஆய்வில் வழியே நிரூபித்திருக்கிறார்கள்" என எடுத்த எடுப்பிலேயே வரலாற்றுத் தரவுகளுடன் பேச தொடங்குகிறார் சேனாதிபதி
"வேளாண்மையையும் வர்த்தகத்தையும் இரு கண்களால் பார்த்த சமூகம் தமிழ்ச் சமூகம். அதன் அடையாளமாக உள்ள காளைச் சின்னம் என்பது சிந்துவெளி நாகரிகம் தொட்டு கீழடி வரை நமது அகழாய்வில் கிடைத்துள்ளது. நமது சங்க இலக்கியங்கள் எல்லாம் இதை ஏறுதழுவுதல் என்றுதான் குறிப்பிட்டுள்ளன.
ஆனால், நாயக்கர்கள் காலம் வரும்போது காளையின் கொம்பில் சில்லறைக் காசுகளைக் கட்டி, அதை அடக்குவதால் 'ஜல்லிக்கட்டு' என்று பெயர் மாறுகிறது. சல்லிக்காசுகளைக் கட்டுவதால் அது ஜல்லிக்கட்டு.
அதுவே பொதுப் பெயராக மாறிவிடுகிறது. அதற்கு முன்பு வரை, ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு எனத் தமிழ்நாட்டில் உள்ள வட்டாரங்களுக்கு ஏற்ற பெயர்களால் இந்த விளையாட்டு குறிப்பிட்டு அழைக்கப்பட்டு வந்துள்ளது" என்றவர் ஜல்லிக்கட்டு அரசியலாக்கப்பட்டது எப்போது? இந்தத் தவற்றுக்கு யார் காரணம் என்பது பற்றிப் பேச ஆரம்பித்தார்.

ஜெயலலிதா ஆட்சி செய்த தவறு? "சரியாகச் சொன்னால் 2006 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியிலிருந்த காலம். அப்போது ஒருவர் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி தர மறுக்கிறார்கள் என்று மதுரையில் உள்ள மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கிளையில் ஒருவழக்கைப் போடுகிறார். நீதிமன்றம் எங்களுக்கு ரேஸ் நடத்தை அனுமதி வழங்கவேண்டும் என்று முறையிடுகிறார்.
அன்றைக்கு அரசு வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் ஒரு தவறு செய்தார்கள். என்ன செய்கிறார்கள் என்றால், மும்பை உயர்நீதிமன்றம் இதைப் போன்ற காளை விளையாட்டுக்களைத் தடை விதித்துள்ளது. ஆகவே தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனுமதிக்க முடியாது எனப் பதிலை அளித்தார்கள்.
அந்தப் பதிலை எடுத்துக்கொண்டுதான் நீதிபதி பானுமதி, ஒட்டுமொத்தமாக ஜல்லிக்கட்டு விளையாட்டையும் சேர்த்து தடை போட்டார். அதன்பிறகு இந்த வழக்கு சென்னைக்கு வருகிறது. அப்போதுதான் இந்த பீட்டா மற்றும் விலங்கு நலவாரிய அமைப்புகள் எல்லாம் வழக்கில் ஆஜராகின்றன.

உலகத்திலேயே அதிக கால்நடைகள் உள்ள நாடு இந்தியாதான். அதிகமாகப் பால் தயாரிக்கக் கூடிய நாடும் இந்தியாதான். இந்தக் கால்நடைகளை வைத்துக் கொண்டு ,அதிக அளவில் வேளாண் தொழில்களில் ஈடுபடும் மக்கள் அனைவரும் இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்காவில்தான் உள்ளனர். ஆங்கிலத்தில் இவர்களை Pastoralism என்பார்கள்.
Pastoralism என்றால் என்ன அர்த்தம் ? ஆகவே இந்தப் பன்னாட்டு அமைப்புகள் இந்தக் கால்நடைகளை ஒழித்துவிட்டால் நாம் வியாபாரம் செய்ய உள்ள இறங்கிவிடலாம் எனத் திட்டம் போட்டன. முன்பு எல்லாம் நாம் வீடுகளில் தட்டிக் கட்டி, கூடைகளில் வைத்து கோழியை வளர்ப்போம். அதை பிறகு உணவாக உட்கொள்வோம்.
அதை பிராய்லர் கோழிகள் கொண்டுவந்ததன் மூலம் வெற்றி பெற்றுவிட்டன. இன்றைக்கு யாரும் முன்புபோல் வீட்டில் கோழி வளர்ப்பதில்லை. இறைச்சி தேவை எனில் கடைகளில் வாங்கி சாப்பிடுகிறோம்.
அதைப்போலவே காளையை அழித்துவிட்டால், நாட்டு மாசுகளும் அழிந்துவிடும். ஆகவே அந்த வணிக நோக்கத்தோடு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு எதிரான வழக்கில் உள்ளே புகுந்தார்கள்.

அதேபோல் இன்னொரு குரூப், அதாவது வலதுசாரி அரசியல் தன்மை கொண்டவர்கள் இந்த வழக்கின் உள்ளே நுழைக்கிறார்கள். அவர்களின் நோக்கம் இந்த சிந்துவெளி நாகரிகத்தைக் காட்டித்தானே தங்களது வரலாற்றுப் பெருமை தமிழர்கள் பேசுகிறார்கள். அதை அழித்துவிட்டால், இவர்களின் பண்பாட்டு அடையாளத்தை அழித்துவிடலாம் என்பது இவர்களது திட்டமாக இருக்கிறது.
சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அடையாளப்படுத்தப்பட்ட சிந்துவெளி நாகரிகத்தை நேரில் இன்றைக்குப் பார்க்கவேண்டும் என ஒருவர் விரும்பினால், அப்படியே அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் உட்கார்ந்து பார்க்கலாம்.
ஆகவே, இதை நிறுத்திவிட்டால், வரலாற்றுத் தொடர்ச்சி ஒழிந்துவிடும். அதன்பொருட்டு இந்த வலதுசாரிகள் இந்த வழக்கில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மு.கருணாநிதி போட்ட சட்டம்? இதைத் தடுக்க 2009இல் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்புச் சட்டம் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவருகிறார். இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் 2014வரை ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் உச்சநீதிமன்றத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு வழக்கில் தங்களால் வெல்ல முடியாது என அறிந்தவர்கள், அன்றைய ஒன்றிய அமைச்சர் ஜெயராம் ரமேஷை வைத்து ஒரு சட்டத்தைக் கொண்டுவருகிறார்கள். இதைவைத்து ஜல்லிக்கட்டுக்குத் தடையைப் பெறுகிறார்கள்.
அதன் பின்னால் என்ன நடத்தது என்பதை உலகம் அறியும். மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய தை புரட்சி போராட்டத்தின் மூலம் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. நமது உரிமை மீட்கப்பட்டது. அதில் எனக்கு என்ன பங்கு உள்ளது என்பதைப் பலரும் அறிவர்.
இதற்குப் பிறகு இந்த பீட்டா அமைப்பு இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதியரசர், 'நீங்கள் போராட்டம் நடத்தி சட்டத்தை மாற்றிவிடலாம் என நினைக்கிறீர்களா?' என்று நம்மைப் பார்த்துக் கேட்டார்.

நீதிமன்றம் கேட்ட வரலாற்றுச் சான்றுகள் ? அப்போது சேனாதிபதி காங்கேயம் ஆராய்ச்சி மையம் சார்பில் இந்த வழக்கில் நாங்களும் ஆஜரானோம். எங்கள் தரப்பு விளக்கங்களை நீதிமன்றம் கேட்டது. நாங்கள் சங்க இலக்கியம் தொடங்கி சிந்துவெளி நாகரிகம் வரை உள்ள ஆராய்ச்சிகளை அப்படியே சமர்ப்பித்து விளக்கம் அளித்தோம்.
உடனே நீதிமன்றம் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுகிறார். இந்த அமர்வு 2017 பிப்ரவரி முதல் 2022 வரை அமைக்கப்படவே இல்லை. இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகே அந்த அமர்வைக் கொண்டுவந்தோம்.
இந்த அமர்வு கிட்டத்தட்ட ஒன்றரை மாதக் காலம் இந்த வழக்கை விவாதித்தது. மிகத் திறமையான வழக்கறிஞர்களை வைத்து மிகச் சிறப்பான வரலாற்று ஆவணங்களை எடுத்துக்காட்டி வாதிட்டது.
அதன் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 'இது அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கக் கூடிய விஷயம். நாம் இதில் தலையிடக்கூடாது' என்ற வரலாற்றுத் தீர்ப்பைக் கொடுத்துள்ளது.
அதற்கு முழுக் காரணமாக இருந்தவர் முதல்வர் ஸ்டாலின்தான். அவர் இந்த அமர்வை அமைக்க அவசரம் காட்டவில்லை என்றால் இது எளிதாக நடந்திருக்காது" என்கிறார்

கார்த்திகேய சிவசேனாதிபதியிடம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யச் சட்டத்தில் இடம் உள்ளதா? எனக் கேட்டோம்.
அதற்கு அவர், "அதிக அளவுக்கு அதில் வாய்ப்புகள் இல்லை" என்கிறார்.
மேற்கொண்டு ஜல்லிக்கட்டு பேரவையைச் சேர்ந்த பி.ஆர்.ராஜசேகரனிடம் பேசினோம். அவர், "இந்த வழக்கில் பீட்டா அமைப்பு இதை நடத்தக் கூடாது. தடை விதித்தே ஆகவேண்டும் எனத் தொடர்ந்து வாதிட்டு வந்தது.
நீதிபதிகளும் பலமுறை இதில் ஏதேனும் மாற்றம் செய்து நடத்தலாமா? எனக் கேட்டபோதும் கூட பீட்டாவின் நோக்கம் தடை பெறுவதிலேயே குறியாக இருந்தது. அதனால்தான் அவர்களால் இந்த வழக்கில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.
தடை ஒன்றையே கேட்ட பீட்டா? அவர்களின் நோக்கம் ஜல்லிக்கட்டை நெறிப்படுத்துவதோ, அல்லது தொடர்ந்து நடத்துவதோ இல்லை. தடை ஒன்றே குறிக்கோளாக உள்ளது என்பதை நீதிமன்றம் உணர்ந்தது. அதனால்தான் இந்த நியாயமான தீர்ப்பை வழங்கியது.
நம்மிடம் சரியான ஆவணங்கள் இருந்தன. நாம் சட்டத்தின்படி மிகச் சரியாக நடந்துகொண்டோம். ஆகவேதான் நீதிபதிகள் 5 பேரும் சேர்ந்து நம் பக்கம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இந்த வழக்குக்காகத் தமிழ்நாடு அரசு பெரும் தொகையை வழக்குக்காகச் செலவிட்டுள்ளது. தொடர்ந்து தொய்வில்லாமல் வழக்கைச் சிறந்த சட்ட வல்லுநர்களை வைத்து நடத்தி இறுதியாக வெற்றி பெற்றுள்ளது.

அதற்காக எங்கள் பேரவை சார்பாகவும் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications