வலுவடையும் காற்று 5 மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு - நல்ல செய்தி சொன்ன வானிலை
ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைவதன் காரணமாக வருகின்ற நாளை முதல் 3 நாட்களுக்கு நீலகிரி,தேனி,திண்டுக்கல், திருப்பூர்,கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக, கொடைக்கானல் பழநி செல்லும் பகுதியில் உள்ள பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை அப்பகுதி மக்கள் கயிறு கட்டி மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 14 செமீ மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம், ஆரணி, வெம்பாக்கத்தில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. சோழவரம், கொடநாடு, நீலகிரியில் 7 செமீ மழை பெய்துள்ளது. சோலையாறு, கலவை, வேப்பூரில் 5 செமீ மழை பெய்துள்ளது. ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் தேனியில் பரவலாக மழை பெய்துள்ளது.

கனமழை
இந்த நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்ப சலனம் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி ஈரோடு, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை செங்கல்பட்டு விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, கடலூர்,திண்டுக்கல், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வலுவடையும் காற்று
வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைவதன் காரணமாக வருகின்ற 28ம் தேதி நீலகிரி ,தேனி ,திண்டுக்கல், திருப்பூர் ,கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

2 நாட்களுக்கு அதி கனமழை
29ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் அதீகன மழை பெய்ய வாய்ப்புள்ளது.தேனி,விருதுநகர், தூத்துக்குடி, சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 30ஆம் தேதி நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமுதல் அதி கன மழையும், திண்டுக்கல்,தேனி,தென்காசி, விருதுநகர்,மதுரை,ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் மேக மூட்டம்
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

கடலுக்குள் செல்ல வேண்டாம்
இன்று முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா ,குமரிக்கடல், கேரள கடலோர பகுதி, லட்சத் தீவு பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதி ஆகிய இடங்களில் காற்றில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications