சுள்ளென்று சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக ஜில்லென்று பெய்யப்போகும் மழை - வானிலையின் கூல் அறிவிப்பு
தமிழகத்தில் பல மாவட்டங்களில் அக்னி நட்சச்திர காலம் போல வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது போல பல மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. அக்னி நட்சத்திர காலம் போல வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 20ஆம் தேதி வரைக்கும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் முதல் பருவமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பருவமழை தினசரியும் பெய்து வருவதால் அணைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளன. பிற மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்றைய தினம் கரூர் பரமத்தியில் 36.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரையிலும் 36 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில் வரும் 20ஆம் தேதி வரைக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
17 மற்றும் 18ஆம் தேதிகளிலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
இன்று முதல் வருகின்ற 19ம் தேதி வரை மத்திய மேற்கு வங்க கடல் ஆந்திர கடலோரப் பகுதியில் தென்கிழக்கு வங்க கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதி, குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு இலங்கை பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications