நெல்லை, தென்காசியில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
சென்னை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ள காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கடந்த மாதம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு மழை கொட்டித்தீர்த்தது. அதற்கு அடுத்து உருவாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி மழை பெய்யாமல் ஏமாற்றியது.
இதனிடையே தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதியில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6-ம் தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8ஆம் தேதி காலை வடதமிழகம்-புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் வந்தடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்; ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
இந்த நிலையில் நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடரும் மழை..சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று தடை..நாளை அனுமதி கிடைக்குமா?