எதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில், மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், வால்பாறை, சோலையாறில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், இன்றும், நாளையும், மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications