ஒற்றைத்தலைமை..அதிமுகவில் குழப்பமான சூழல்.. வளர்மதியின் ஆதரவு யாருக்கு?
அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் திடீரென்று குரல் எழுப்பியுள்ளனர். வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் ஒற்றை தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. குழப்பமான சூழ்நிலையில் ஆதரவு யாருக்கு என்று கூற முடியாது என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி.
Recommended Video
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ம் தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவை வழிநடத்தி செல்ல இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமையே சிறந்தது. அதனால் வருகிற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை பதவி முறையை மீண்டும் தீர்மானமாக கொண்டு வர வேண்டும். எடப்பாடி தலைமையில் ஒற்றைத் தலைமை உருவாக வேண்டும் என்ற கருத்தையே எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பலரும் வலியுறுத்தி பேசியதாக தெரிகிறது.

மூத்த நிர்வாகிகள்
ஆலோசனைக்கு பின்னர் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கூறும்போது, ‘ஒற்றை தலைமை வேண்டும் என்றும், இரட்டை தலைமையே நீடிக்கலாம் என்ற கருத்தும் தற்போது அதிமுகவில் எழுந்துள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் விவாதித்து வருகிறார்கள். தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதுவே இறுதியானது என்றனர்.

ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள்
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நேற்று தமிழகத்தில் சென்னை, ராமநாபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும். ஜெயலலிதாவால் கைகாட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்தான் அதிமுகவை வழிநடத்தி செல்ல வேண்டும், நிரந்தர பொதுச்செயலாளரே தலைமை ஏற்க வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

சாலை மறியல்
தொண்டர்களின் பாதுகாவலர் ஓபிஎஸ் என்று சென்னையில் பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் நேற்று சுவரொட்டி ஒட்டி இருந்தனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீடு அருகே ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இதை எடப்பாடி ஆதரவாளர்கள் கிழித்து எறிந்தனர். இதை கண்டித்து ஓபிஎஸ் வீடு அமைந்துள்ள சாலை முன் அமர்ந்து அவரது ஆதரவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இபிஎஸ் வியூகம்
அதேநேரம், எடப்பாடி பழனிசாமியும் வருகிற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை கோரிக்கையை முன் வைத்து, அதிமுக கட்சியை கைப்பற்ற வியூகம் வகுத்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த எடப்பாடி தரப்பில் சில முன்னாள் அமைச்சர்கள் முயன்று வருகிறார்கள். அதன்படி, அதிமுகவில் ஒற்றை தலைமை அதாவது பொதுச்செயலாளர் பதவிக்கான தீர்மானத்தை மீண்டும் பொதுக்குழுவில் கொண்டு வர வேண்டும். பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நீங்களே பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் என்ற நெருக்கடி தரப்படுவதாக தெரிகிறது.

ஒபிஎஸ் ட்வீட்
அதிமுக தொண்டர்கள் தயவு செய்து அமைதி காக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் அனைவரையும் தயவு செய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

வளர்மதி சொல்வதென்ன
இரண்டாவது நாளாக நேற்றைய தினமும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி வீடுகளில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, ஒற்றை தலைமை வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு பேசி வருவதாக கூறினார். அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பேசி வருவதாக கூறிய அவர், குழப்பமான இந்த சூழ்நிலையில் யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்க முடியாது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications