செங்கல்பட்டில் "கை" இல்லாமல் நின்ற ஊராட்சி மன்ற தலைவர்.. பட்டா மாறுதல்? அரசின் கவனத்தை ஈர்க்க புதுமை
சென்னை: தமிழக அரசின் குறைகளை சுட்டிக் காட்டுவதற்காக, ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் நூதன போராட்டத்தை துவங்கியிருக்கிறார்.. அரசு அலட்சியமாக செயல்பட்டு வருவதால், எங்களை இப்படி வருத்தி கொள்கிறோம்.. அரசின் கவனம் எங்கள் மீது திரும்ப வேண்டும் என்பதால்தான் என்று கூறும் அன்பரசன், மிக முக்கிய கோரிக்கையை தமிழக அரசுக்கு விடுத்துள்ளார். என்ன நடக்கிறது செங்கல்பட்டு மாவட்டத்தில்?
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில், தமிழக அரசு சார்பில், 35,000 பேருக்கு வழங்கிய இலவச பட்டாக்களில் குளறுபடிகள் உள்ளதாக தொடர்ந்து சலசலப்பு எழுந்து வருகிறது.

பலரின் உறவு முறையை மாற்றியும், சர்வே எண்களில் குளறுபடி செய்தும், விஏஓக்கள் பதிவேற்றம் செய்ததால், பயனாளிகள் பட்டாக்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது... அதுமட்டுமல்லாமல், இந்த பட்டா குளறுபடிகளை திருத்த வருபவர்களிடம் பெரும் தொகையை சிலர் வசூலிக்கிறார்களாம். இப்படியெல்லாம் புகார்கள் வெடித்தவாறே உள்ளது.
பட்டாவில் திருத்தம் - குளறுபடி
இந்நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்க அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு நூதன போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். காரணம், திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அருங்குன்றம் ஊராட்சியில், மேல் கணக்கப்பட்டு, அருங்குன்றம், மண்ணவிடுதேவதை உள்ளிட்ட 3 வருவாய் கிராமங்களில் 600 குடும்பத்திற்கும் மேல் வசித்து வருகிறார்கள்.
இதில் இதில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா உள்ளது. 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீட்டுமனை பட்டாவில் குளறுபடி உள்ளதாக கூறப்படுகிறது.. அதாவது தவறான சர்வே எண், பெயர், ஊராட்சி பெயர் போன்றவை உள்ளதால் அம்மக்கள் பெரும் அதிருப்திக்கும், ஏமாற்றத்திற்கும் ஆளாகி உள்ளனர்.
ஊராட்சி மன்ற தலைவர்
இந்த குளறுபடிகளை திருத்துவதற்காக பலமுறை முயன்றும், பட்டாவை திருத்தாமல் அதிகாரிகள் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது.
எனவேதான், இதனை கண்டிக்கும் விதமாகவும், பட்டாவில் திருத்தம் செய்ய தாமதம் செய்யும் அரசின் நடவடிக்கையை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவர் இன்றைய தினம் நூதன போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.. இதற்காக கை இல்லாமல் சட்டை அணிந்து நிர்வாக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கிராம நிர்வாக பணிகள்
200 பட்டாக்களை சரி செய்யும் வரை கை இல்லாமல் சட்டை அணிந்து கிராம நிர்வாக பணிகளில் ஈடுபட போகிறாராம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு.
தன்னுடைய இந்த நூதன போராட்டம் குறித்து அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "பட்டாவில் நிறைய தவறுகள் உள்ளன.. பிழைகளை சரி செய்ய முயன்றும் அது நடக்கவில்லை.. கடந்த 1 வருட காலமாகவே மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அலுவலர், வட்டாட்சியர் உட்பட துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..
கை இல்லாமல் சட்டை
எனவே, இந்த போராட்டம் முழுக்க முழுக்க அரசின் கவனத்தை ஈர்க்கவே நடத்துகிறேன்.. அரசின் குறைகளை சுட்டிக் காட்ட எங்களை இப்படி வருத்தி கொள்கிறோம். எனது மக்களுக்கு சேவை செய்வது அரசின் கடமை. ஆனால், அரசு அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.
இனியும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில் வரும் நாட்களில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என்று அனைவருமே இப்படி கை இல்லாமல் சட்டை அணிவோம்.. எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக இதனை கருத்தில் கொண்டு எங்கள் மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காண வேண்டும்" என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications