சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் மீண்டும் வெள்ளம் - சுரங்கப்பாதைகள் மூடல்
சென்னை, திருவள்ளூரில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் மீண்டும் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மேற்கு மாம்பலம், தியாகராய நகரில் மீண்டும் வெள்ள நீர் சாலைகளில் தேங்கியுள்ளது. கனமழை காரணமாக தியாகராயர் நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே சென்னைவாசிகள் வெள்ளநீரில் தத்தளித்து வருகின்றனர். 7ஆம் தேதி முதலே அதிகனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு ஆரம்பித்த மழை இன்று காலை வரை விட்டு விட்டு கன மழையாக பெய்தது. ஆவடியில் அதிகபட்சமாக 20 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. மாமல்லபுரத்தில் 18 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
கோயம்பேடு, சென்ட்ரல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், போரூர், மயிலாப்பூர் என மாநகரம் முழுவதும், புறநகர்ப் பகுதிகளிலும் அவ்வப்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து குளம் போல் மாறியது.
சென்னையில் கே கே நகர், அசோக் நகர், தி. நகர், மேற்கு மாம்பலம் என பல பகுதிகளுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகள் மட்டுமல்லாது குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளில் வசிப்பவர்கள் அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு செல்லக் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை காரணமாக தியாகராயர் நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. பள்ளிக்கரணை அடுத்த நாராயணபுரத்தில் உள்ள ஏரியில் இருந்து வெளியேறி வரும் உபரி நீரால் கொளத்தூர், வெள்ளக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு வசிக்கக் கூடிய மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி 30ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் தமிழகத்தில் மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று, கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை மற்றும் மிக கனமழை பெய்யும். அதனால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களில் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications