சென்னை-பெங்களூர்-மைசூர்.. வந்தே பாரத் ரயில் கவுண்டவுன் ஸ்டார்ட்.. பயணிகளுக்கு அசத்தல் வசதிகள்!
சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு வருகிற 11-ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ள நிலையில், வந்தே பாரத் ரயிலில் என்னென்ன அசத்தல் வசதிகள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் நாடு முழுவதும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 5-வது ஆக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
ஒவைசி மீது தாக்குதல்.. வந்தே பாரத் ரயிலுக்கு பறந்து வந்த கற்கள்! அனல் பறக்கும் குஜராத் தேர்தல் களம்
11-ஆம் தேதி முதல்
பெங்களூரு வழியாக சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 11 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் இந்த ரயில் காட்பாடி வழியாக பெங்களூர் சென்று மைசூருவை அடையும். இடையில் காட்பாடி மற்றும் பெங்களூரில் மட்டுமே நிற்கும். தற்போது புதன்கிழமையை தவிர்த்து வாரத்தில் மீதமுள்ள் 6 நாட்களும் இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று முதல் இதற்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
எண்ணற்ற வசதிகள்
வருகிற 11-ஆம் தேதி முதல் இந்த ரயிலில் மக்கள் பயணம் செய்ய ஆவலோடு காத்திருக்கின்றனர். பலரும் ஆவலோடு எதிர்பார்க்கும் நிலையில் அந்த ரயிலில் என்னென்ன வசதிகளை பயணிகள் அனுபவிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம். வந்தே பாரத் ரயிலில் எண்ணற்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பயணிகள் விமான பயணத்திற்கு இணையான சொகுசான வசதிகளை வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் போது உணரும் வகையில் உயர்தர வசதிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், ரயில் பாதுகாப்புக்காக கவாச் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.
160 கி.மீ வேகத்தில் இயங்கும் திறன்
இந்த கவாச் தொழில் நுட்பம் என்பது ரயில்கள் மோதலை தடுப்பதற்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது ஆகும். இந்த ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். அதிவேக பயணத்திற்காக அதாவது 160 கி.மீட்டர் வேகத்தில் இயங்கும் திறனுக்காக போகியில் இழுவை மோட்டார்கள் உள்ளன. பாதுகாப்பான மற்றும் சொகுசான பயணத்திற்காக மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் வசதியும் இந்த ரயிலில் கொடுக்கப்பட்டுள்ளது.
180 டிகிரி கோணத்தில் சுழலும்..
ரயிலின் அனைத்து இருக்கைகளும் சாய்வு வசதியை கொண்டது. அதாவது பேருந்துகளில் செமி சிலீப்பர் வசதி கொடுக்கப்பட்டு இருப்பது போல சாய்வு வசதிகளுடன் கூடிய இருக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்கியூட்டிவ் கோச்களில் 180 டிகிரி கோணத்திலும் சுழலும் வகையில் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணத்தின் போது வெளியில் இருக்கும் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணிக்க முடியும்.
32 இன்ச் ஸ்க்ரீன்கள்
ஓவ்வொரு பெட்டியிலும் 32 இன்ச் ஸ்க்ரீன்கள் இடம் பெற்றுள்ளன. இதில், பயணிகளுக்கான தகவல் ஒளிபரப்புவதோடு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையிலான டாய்லட்களும் இடம் பெற்றுள்ளன. இருக்கை எண்களை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் அறிந்து கொள்ளும் வகையில் பெய்ரலி எழுத்து முறையிலும் இருக்கை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன
இந்த ரயிலில் பெட்டிக்கு வெளியே பிளாட்பார்மை நோக்கி நான்கு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ரியர்வியூஸ் கேமராக்களும் அடங்கும். அதாவது பின்பக்கம் என்ன நடக்கிறது என்பதை இந்த ரியர் வியூஸ் கேமராக்கள் மூலம் பார்த்துக்கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. 30 சதவீத மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவசர கால சூழலில் லோகோ பைலட்டும் டிரெயின் கார்டும் தங்களுக்குள் மட்டும் இன்றி பயணிகளையும் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் கம்யூனிகேஷன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி பேக் அப் வசதிகள்
ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, சிசிடிவி கேமராக்கள் வைஃபை ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், 3 மணி நேரம் பேட்டரி பேக் அப் வசதிகள், ஜிபிஎஸ் வசதி, பயோ- டாய்லட்டுகள் என நட்சத்திர விடுதிக்கு நிகரான வசதிகள் உள்ளன. சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. வரும் 2023-ஆம் ஆண்டிற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎஃப் இலக்கு நிர்ணயித்துள்ளது. பாக்டிரியா, வைரஸ் உள்ளிட்டவற்றை பில்டர் செய்து சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான காற்று வருவதற்கும் வெளியேறுவதற்கான வசதிகள் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதிர்வுகள் இன்றி சொகுசான பயணம்
வந்தே பாரத் ரயிலின் எடை 38 டன்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிவேகமாக செல்லும் போது கூட அதிர்வுகள் இன்றி பயணிகள் சொகுசான பயணத்தை உணர முடியும். ரயிலின் தண்டவாளங்களில் இரண்டு அடிக்கு நீர் சூழ்ந்திருந்தால் கூட ரயில்கள் தொடர்ந்து செல்லும் வசதியை கொண்டது. கதவுகள் அனைத்தும் ஆட்டோமெட்டிக் வசதியை கொண்டதாகும். இதன் கட்டுப்பாடு ரயிலின் பைலட் வசம் இருக்கும். விசாலமான ஜன்னல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் லக்கேஜ்களை வைப்பதற்காக கூடுதல் இட வசதியும் உள்ளது. இந்த ரயிலின் பெரும்பாலான பாகங்கள் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது ஆகும்.
கட்டணம் எவ்வளவு?
சென்னை மைசூரு இடையே பயணிக்க எகனாமி வகுப்பில் ரூ.921 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், எக்ஸ்கியூட்டிவ் வகுப்பில் பயணிக்க 1,880 ரூபாயும் வசூலிக்கப்படலாம் எனத்தெரிகிறது. மைசூருவில் இருந்து பெங்களூருவிற்கு கட்டணமாக எகனாமி வகுப்பிற்கு ரூ. 368-ம் எக்ஸ்கியூட்டிவ் வகுப்பிற்கு ரூ.768 ஆக நிர்ணயம் செய்யப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.