“மகளிர் உரிமைத் தொகை”.. சென்னை கலெக்டர் வீடு வீடாக ரெய்டு! உங்க விண்ணப்பத்துல உண்மை இருக்கா?
சென்னை: மகளிர் உரிமைத் தொகை முகாம்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் நேற்று வீடு வீடாக சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழ்நாடு தொடங்க உள்ளது. இந்த உரிமைத் தொகையை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்ற பெண்கள் யார் என கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் இதற்கான முகாம்கள் தொடங்கப்பட்டன.

முதல் கட்ட முகாமில் விண்ணப்பங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு ஆகஸ்டு 4 ஆம் தேதி நிறைவு பெற்றது. 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் அதன் மூலம் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டன. ஆகஸ்டு 5 ஆம் தேதி 2 ஆம் கட்ட முகாம் தொடங்கப்பட்டு 18 ஆம் தேதி வரை நடைபெற்றது.
2 ஆம் கட்ட முகாமில் விண்ணப்பிக்காதவர்களுக்காக தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சிறப்பு முகாமை நடத்தியது. 1.63 கோடி விண்ணப்பங்கள் அதன் மூலமாக அரசுக்கு வந்தன. இந்த விண்ணப்ப படிவத்தின் பின் பக்கமாக 11 உறுதிமொழிகள் அச்சிடப்பட்டு கையெழுத்து பெறப்பட்டன.
ரூ.1000 உரிமைத் தொகை பெற தகுதியுடையவர் என்பதற்காக தகவல்கள் அதில் இடம்பெற்று இருந்தது. அதன் கடைசி உறுதி மொழியில், "11. விண்ணப்பத்தில் என்னால் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை. தவறான தகவல்களைக் கொடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற்றது கண்டறியப்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிவேன்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் முகாம்கள் நிறைவடைந்து சரியான தகவல்களை மக்கள் விண்ணப்பங்களில் வழங்கி இருக்கிறார்களா என்பதை விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்ற ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சி அருணா நேரில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.
அமைந்தகரை, வில்லிவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மட்டும் 9.58 லட்சம் பேர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து இருக்கும் நிலையில், 1,428 ரேசன் கடைகளில் தலா ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். கண்காணிப்பு பணிக்காக சென்னை துணை ஆணையர், சென்னை ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
களவு ஆய்வுப் பணிகளில் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பயனாளிகளின் வீடுகளில் விண்ணப்பம் பதிவிடும்போது செல்போனுக்கு வந்த மெசேஜ் விபரங்களையும் அவர்கள் கேட்டறிந்தனர். இதனை அடுத்து முதற்கட்ட பட்டியலும், அதன் தொடர்ச்சியாக இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications