வேறலெவலில் அப்டேட் ஆகும் சென்னை அரசு பேருந்துகள்.. மக்களுக்கு குட்நியூஸ்
சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை 100 மீட்டர் தொலைவுக்கு முன்னரே அறிவிக்கும் திட்டம் மேலும் ஆயிரம் பேருந்துகளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மற்ற ஊர்களுக்கும் சென்னைக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற ஊர்களில் எல்லாம் தனியார் நகர பேருந்துகள் இயங்குகின்றன.ஆனால் சென்னை மாநகரில் மட்டும் அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் தான் இயக்கப்படுகின்றன. ஆனால் சென்னை புறநகர் பகுதிகளில் மிககுறைவாக தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

முழுக்க முழுக்க அரசு பேருந்துகள் இயக்கப்படுவதே இதற்கு காரணம். சென்னை மாநகரம் முழுவதும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 700 க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3,454 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. சாதாரண கட்டணத்தில் 1,559 பேருந்துகளும், விரைவு மற்றும் சொகுசு - 1,674, 'ஏசி' - 48, சிறிய பேருந்துகள் - 207 இயக்கப்படுகின்றன. சென்னை மாநகர பேருந்துகளின் வாயிலாக தினமும் 28.70 லட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். சென்னையில் மொத்தம் 6026 பஸ் ஸ்டாப்புகள் உள்ளன.
இந்நிலையில் சென்னைக்கு புதிதாக வருபவர்கள், சென்னையில் புதிதாக ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்றால், அந்த பேருந்து நிறுத்தம் குறித்து நடத்துனர் சொன்னால் தான் தெரியும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை 100 மீட்டர் தொலைவுக்கு முன்னரே அறிவிக்கும் திட்டம் 150 பேருந்துகளில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முயற்சியால் பயணிகள் எவ்வித சிரமமின்றியும், கால தாமதமின்றியும் பேருந்தில் இருந்து இறங்கிட பேருதவியாக இருந்தது.
இதையடுத்து சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை 100 மீட்டர் தொலைவுக்கு முன்னரே அறிவிக்கும் திட்டம் மேலும் ஆயிரம் பேருந்துகளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் விரைவில் 500 பேருந்துகள் வாங்கவும் முடிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது கூடுதல் பேருந்துகள் தேவை என்பதால், கூடுதல் பேருந்துகள் வாங்கும் நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அரசு பேருந்துகள் எங்கு வருகிறது என்பதை பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்தபடி அறியும் ஆப் வசதியை தமிழக அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications