சென்னையில் 30 ஆண்டுகளில் இரு முறை.. மணிக்கு 100 கி.மீ. காற்றின் வேகம்.. வெதர்மேன் தந்த அப்டேட்!
சென்னை: சென்னையில் கடந்த 30 ஆண்டுகளில் இரு முறை மட்டும் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த மாதம் 1 ஆம் தேதி தொடங்கியது. அப்போது முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்தது. அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவானது.
இது மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழையை கொடுக்கவில்லை. ஆனால் கடுங்குளிரை கொடுத்தது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊட்டி, கொடைக்கானலை போல் குளிர் நிலவியது.
இன்று உருவாகும் சக்கரம்.. கிங் மேக்கரால் உருவாக போகும் முதல் புயல்? வர்தாவை நினைவுபடுத்திய வெதர்மேன்
காற்றழுத்தம்
இந்த நிலையில் அடுத்ததாக இன்றைய தினம் வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. ஆனால் இது கடந்த காற்றழுத்தத்தை போல் சும்மா செல்லாது, மழையை கொடுத்துவிட்டுத்தான் செல்லும் என்கிறார்கள். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து வெதர்மேன் வெளியிட்ட போஸ்ட்டில் வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவானது.
தாய்லாந்து
ஆரம்ப கட்டத்தில் அது தாய்லாந்திலிருந்து அந்தமான் கடல் பகுதிக்கு நகர்கிறது. வரும் 8ஆம் தேதி வாக்கில் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும். மாமல்லபுரம் - காரைக்கால், புதுவை - கடலூர் பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிங் மேக்கரான எம்ஜேஓ இருப்பதால் 90 சதவீதம் உறுதியாக சொல்லலாம் இது இந்த சீசனின் முதல் புயலாகும்.
காற்றின் தாக்கம்
ஆனால் வறண்ட காற்றின் தாக்கத்தால் அது கடலோரத்திலேயே வலுவிழக்கக் கூடும். சென்னையில் கடந்த 30 ஆண்டுகளில் இரு முறை மட்டும் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது. அதாவது 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புயல் ஏற்பட்ட போது சென்னையில் அத்தகைய வேகத்தில் காற்று வீசியது.
வர்தா புயல்
அது போல் கடந்த 2016 ஆம் ஆண்டு வர்தா புயலின் போதும் இதே அளவு வீரியத்துடன் சென்னையில் காற்று வீசியது. உடனே வரும் காற்றழுத்தத்தால் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசுமோ என அச்சம் கொள்ள வேண்டாம். தரவுகளை நான் பதிவு செய்தேன், அவ்வளவுதான் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
காற்று வேகம்
வர்தா புயலின் போது அதிக அளவு காற்று வீசியதால் சென்னையில் நிறைய மரங்கள் வேரோடு முறிந்தன. மேலும் மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. 100 கி.மீ. காற்று என்பது மரத்தை வேரோடு சாய்க்கும் வல்லமை கொண்டது. மற்ற நேரங்களில் கூரை பிய்த்து கொண்டு பறப்பது, பேனர்கள் கீழே விழுவது போன்றவை நடைபெறும். அதனால் புயல் காலங்களில் சாலையில் எச்சரிக்கையுடன் செல்வது அவசியமாகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே குளிர் நிலவி வருகிறது.
பனி
மார்கழி மாதம் பிறப்பதற்கு முன்பே இத்தகைய குளிர் நிலவுகிறது. ஆனால் பனி பெய்தால் மழை வராது என்பதெல்லாம் தவறான நம்பிக்கை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தற்போது கடலூர், திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த சீசனின் முதல் புயல் எத்தகைய மழையை தரும் என்பது குறித்து இன்னும் சில நாட்கள் கழித்துதான் கணிக்க முடியும்.