முன்னெச்சரிக்கை..புயலில் இருந்து மீண்டது சென்னை..மகிழ்ச்சியோடு சொன்ன முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்னர் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதுமாக மீண்டுள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்ததன் காரணமாக வடசென்னை, தென் சென்னையில் கடலோர பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான படகுகள் சேதமடைந்தன. 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூழ்கின.
தென்சென்னையில் கோவளம், ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம் பகுதிகளில் புயலால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. படகுகள், மீன்பிடி வளைகளில் மணல்கள் மூடியுள்ளன.மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க ஏற்படுத்தப்பட்டிருந்த மரப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்து மணலால் மூடப்பட்டுள்ளது. முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது.
இதனிடையே இன்று காலையில் தென் சென்னையில் ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து காசிமேட்டில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், புயல் பாதிப்பு குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசி ஆலோசனை நடத்தப்பட்டது.
இரவு பகலாக விடிய விடிய அதிகாரிகள் பணியாற்றியுள்ளனர். புயல், மழை பாதிப்புகளை அகற்ற பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி. இதுபோன்ற விரைவான பணியால்தான் மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதுமாக மீண்டுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
புயலால் மழை அதிகமாக பெய்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படவில்லை. முறிந்து விழுந்த மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டன. அனைத்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்து தடையின்றி செயல்படுகிறது. மக்களின் ஒத்துழைப்பால் தான் பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து விரைவில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சூறையாடிய மாண்டஸ்..தவிக்கும் மக்கள்.. திருவண்ணாமலையில் 25 செமீ மழை..எங்கெங்கு வெள்ளம்