ரிவால்டோ யானையின் நடமாட்டம்.. வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, வீடியோ பதிவு தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மாவனல்லா, வாழைத்தோட்டம் பகுதிகளில் இடது கண் பார்வை இழந்த நிலையில், தும்பிக்கையில் காயத்தோடு, கடந்த 12 ஆண்டுகளாக மக்கள் வசிக்கும் பகுதியில் ரிவால்டோ யானை சுற்றி வந்தது.

ரிவால்டோ யானை
இதனை தொடர்ந்து வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து ரிவால்டோ யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்தனர். கூண்டில் அடைத்து சிகிச்சை வழங்கப்பட்டதால் விலங்குகள் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் வனத்துறையினர் அதனை காட்டில் விட்டனர். ஆனால் அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு திரும்பி வந்து விட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அந்த யானையை மீண்டும் காட்டில் விட எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல உத்தரவிடக் கோரியும் இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

மீண்டும் விசாரணை
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, யானையின் நடமாட்டம், உணவு அருந்துவது குறித்த வீடியோ பதிவு வனத்துறை சார்பிலும், மனுதாரர் சார்பில் இந்தியாடுடே தொலைகாட்சி பதிவு செய்த காட்சியும் காண்பிக்கப்பட்டது...இதையடுத்து,ரிவால்டோ யானை ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு மற்றும் 200 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்

வனவிலங்கு ஆர்வலர்கள்
ஆனால் தும்பிக்கைப்பாதிக்க பட்டுள்ளதால் அதனால் உணவை முழுமையாக சாப்ப்பிட முடியாமல் பாதி உணவு மற்றும் தண்ணீர் கீழே விழுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரிவால்டோ யானை ஆரோக்கியமாக இருப்பதால் மீண்டும் காட்டில் விட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது..காணொளி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்த தலைமை வன பாதுகாவலர்,ரிவால்டோ யானையை 5 மருத்துவர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் யானை காட்டிற்குள் விடப்பட்டுள்ளதாகவும், ரிவால்டோ காட்டில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மனித தலையீடு
இதையடுத்து,தும்பிக்கையில் குறை இருந்தாலும், ரிவால்டோவால் சாப்பிட முடிவதாக தெரிவித்த நீதிபதிகள், விலங்குகள் காட்டில் தான் சிறப்பாக இருக்க முடியும் என கருத்து தெரிவித்து காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து 8 வாரத்தில் வீடியோ பதிவை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், யானைகள் வழிதடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டதற்கு, யானைகள் வழிதடத்தில் மனித தலையீடு இல்லமால் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications