குற்ற விசாரணை அடையாள சட்டத்திற்கு எதிராக வழக்கு! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னை: குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்கள், கைது செய்யப்பட்டவர்களின் அங்க அடையாளங்களை சேகரிக்க வகை செய்யும் குற்ற விசாரணை அடையாள சட்டப் பிரிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 6 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில், குற்ற விசாரணை அடையாளச் சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் மூலம், குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுப்பு காவலில் வைக்கப்படுபவர்களின் கை ரேகை பதிவுகள், கருவிழி அடையாளங்களை பதிவு செய்யலாம்.
மேலும் விழித்திரை பதிவுகள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்கவும், சேமித்து வைக்கவும் காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்தச் சட்டம், கடந்த ஏப்ரல் மாதம், 18-ம் தேதி, அரசிதழில் வெளியிட்டு அமலுக்கு வந்துள்ளது.

பொதுநல வழக்கு
இந்நிலையில், இந்த சட்டத்தில், தனிமனித சுதந்திரத்தை, உரிமையை பறிக்கும் வகையில் உள்ள பிரிவுகளை ரத்து செய்யக்கோரி, சென்னையைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

சட்டப் பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும்
இந்த மனுவில், மக்கள் நல அரசான இந்திய அரசு, தண்டனை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் எந்த சட்டமும் இயற்ற முடியாது என்றும், அதிகாரிகளுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கும் இந்தச் சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை நீதிக்கு முரணானது
மேலும், கைது செய்யப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை பதிவு செய்வதை கட்டாயப்படுத்தும் இந்த சட்டப் பிரிவுகள் தன்னிச்சையானவை. இது சம்பந்தமான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யாதது சட்ட விரோதமானது. இயற்கை நீதிக்கு முரணானது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு உத்தரவு
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு தொடர்பாக, மத்திய அரசு 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications