நடிகை பலாத்காரம்.. மாஜி அமைச்சர் மணிகண்டன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை! என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?
சென்னை: நடிகை சாந்தினியை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
துணை நடிகை சாந்தினி சில வாரங்கள் முன்பு அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டனுக்கு எதிராக பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
திருமணம் செய்த மணிகண்டன் தன்னுடன் சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாகஇருந்ததாகவும் அப்போது 3 முறை கர்ப்பமானதாகவும், மணிகண்டன் தனக்கு தெரிந்த டாக்டர்கள் மூலம் கலைத்து அபார்ஷன் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

மணிகண்டன் கைது
இந்த புகார் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்தனர். இதையடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜாமீனை நிராகரிக்க கோரிக்கை
இதையடுத்து ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார் மணிகண்டன். புகார்தாரரான நடிகை சாந்தினி தரப்பில், மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் அவருடன் கணவன் - மனைவியாக வாழத் துவங்கியதாகவும், ஏமாற்றிய மணிகண்டன் ஜாமீனை நிராகரிக்க வேண்டுமென வாதிடப்பட்டது.

நிபந்தனை ஜாமீன்
செல்வாக்கான நபர் என்பதால், சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில், தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், இன்று அளித்த தீர்ப்பில், மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

என்ன நிபந்தனைகள்
அதன்படி, 2 வாரங்களுக்கு காவல்துறை முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திடவும், அதன்பிறகு விசாரணைக்கு தேவைப்படும்போதெல்லாம் ஆஜராகவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மணிகண்டனின் பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மணிகண்டன் வாக்குமூலம்
வழக்கு விசாரணையின் ஆரம்பகட்டத்தில் நடிகையைப் பற்றி தனக்கு யார் என்றே தெரியாது என்று மணிகண்டன் வாக்குமூலம் அளித்தார். ஆனால் பிறகு அந்த நடிகை தன்னிடம் ஐந்து லட்ச ரூபாய் கடன் கேட்டு வந்ததாகவும் அப்போது தான் பழக்கம் என்றும் தெரிவித்தார்.

மாற்றி மாற்றி கூறிய மணிகண்டன்
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்போது மணிகண்டன் தரப்பில், அந்த நடிகையை தான் ஏமாற்றவில்லை என்றும், தனக்கு திருமணம் நடைபெற்றது தெரிந்து ஒரே வீட்டில் வாழ்ந்ததாகவும் தெரிவித்தார். எனவே இதை மோசடி மற்றும் பலாத்காரம் வழக்காக கருத கூடாது என்பது மணிகண்டன் தரப்பு வாதமாக இருந்தது. ஆக மொத்தம் ஆரம்பம் முதல் இப்போது வரை மணிகண்டன் தரப்பில் நடிகை பற்றி மாற்றிமாற்றி கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications